கண்டி – கலஹா பிரதான வீதியின் கலஹாகுறுப் பகுதியில், பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றின் மீது இன்று பைனஸ் மரம் முறிந்து விழுந்து விபத்தொன்று சம்பவித்துள்ளது.
பாடசாலை முடிந்ததும் தனது மகனை முச்சக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டு தந்தை வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த தந்தையும் மகனும் எவ்வித ஆபத்துகளுமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். எனினும், மரம் விழுந்ததில் முச்சக்கர வண்டிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, இதற்கு முன்னரும் இப்பிரதான வீதியில் பயணித்த பேருந்து (பஸ்) ஒன்றின் மீதும் இவ்வாறு மரம் முறிந்து விழுந்த சம்பவம் பதிவாகியிருந்ததாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படுவதற்கு முன்னர், பிரதான வீதியோரமாகக் காணப்படும் ஆபத்தான மற்றும் பாதுகாப்பற்ற மரங்களை உடனடியாக அகற்றித் தருமாறு உரிய அதிகாரிகளிடம் பிரதேச மக்கள் அவசரமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
க.யோகா










