“இனப்பிரச்சினைக்கான குறைந்தபட்ச அரசியல் தீர்வாகவே மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டது. எனவே, அந்த மாகாணசபை முறைமையைக்கூட செயல்படுத்துவதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்க மறுக்கின்றது. இது விடயத்தில் எதிரணிகளும் முதுகெலும்பற்ற வகையிலேயே செயல்படுகின்றது.”
இவ்வாறு ஐக்கிய சோசலிஷக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் இந்த வருடம் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என நான் நம்பவில்லை. அதற்கான தேவைப்பாடு இந்த அரசாங்கத்துக்கு இருப்பதாகவும் தெரியவில்லை.
தெற்கைவிடவும் வடக்கு, கிழக்குக்குதான் இது முக்கியம். குறைந்தபட்ச அதிகாரப்பகிர்வு பொறிமுறையாக உள்ளது. தமிழ் மக்கள் தொடர்பில் பேசும் அரசாங்கம், மாகாணசபை முறைமையைக்கூட செயல்படுத்த தயாரில்லைபோல் தெரிகின்றது.
உயிரற்ற எதிர்க்கட்சியே நாட்டில் உள்ளது.
குறைந்தபட்சம் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு தமக்கு அதிகாரம் உள்ள உள்ளாட்சிசபைகளில் தீர்மானம் நிறைவேற்றலாம். அதனைக்கூட இதுவரை செய்யவில்லை. ஏனைய சபைகளிலும் யோசனையை கொண்டுவரலாம். அப்போது அரசின் நிலைப்பாடு தெரியவரும்.
அதேவேளை, மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படும் என உறுதி வழங்கப்பட்டது. அதனை நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஹட்டன் பிரகடனத்தில் கூறப்பட்ட விடயங்கள் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்.” – என்றார் சிறிதுங்க ஜயசூரிய.
