இலங்கையின் பெருந்தோட்ட துறையின் நிலையான வளர்ச்சி மற்றும் தரவுகளின் அடிப்படையிலான தீர்மானங்களை எடுக்கும் செயல்முறையை வலுப்படுத்தும் நோக்கில், “பெருந்தோட்டத்துறை தீர்மான ஆதரவு அமைப்பு” (Plantation Sector Decision Support System – DSS) நேற்றைய தினம் (24.06.2026) உத்தியோக ப்பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் வசம் கையளிக்கப்பட்டது.
“ஒரே தளம் • பல நிறுவனங்கள் • சிறந்த தீர்மானங்கள்” என்ற கருப்பொருளின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் தளமானது, பெருந்தோட்த்துறைக்கு தேவையான அனைத்து முக்கிய தரவுகளையும் ஒரே தளத்தின் கீழ் ஒருங்கிணைக்கிறது.
இதன் மூலம் கொள்கை வகுத்தல் , தீர்மானங்களை எடுக்கும் செயல்முறைகளை மிகவும் திறமையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், சான்றுகளின் அடிப்படையிலும் மேற்கொள்ள வழிவகுக்கிறது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகியன இணைந்து, டிஜிட்டல் விவசாய உருமாற்ற (Digital Agriculture Transformation – IDAT) திட்டத்தின் கீழ் இந்த தளத்தை உருவாக்கியுள்ளன. இது அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரு டிஜிட்டல் பொதுச் சொத்தாக (Digital Public Asset) அமைச்சிடம் கையளிக்கப்பட்டது.
இந்த அமைப்பின் மூலம் தேயிலை, இறப்பர், தென்னை மற்றும் முந்திரி ஆகிய பிரதான பெருந்தோட்டப் பயிர்கள் தொடர்பான தரவுகள், அமைச்சின் கீழ் உள்ள 7 நிறுவனங்களில் இருந்து ஒரே டிஜிட்டல் தளத்தில் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
இதன் மூலம் இத்துறையின் முன்னேற்றத்தைக் கண்காணித்தல், தரவுகளைப் பகுப்பாய்வு செய்தல், காலநிலைத் தாக்கங்களை மதிப்பிடுதல் மற்றும் அரசாங்கத்தின் மானியங்கள் மற்றும் முதலீட்டுத் திட்டங்களின் முன்னேற்றங்களை மதிப்பாய்வு செய்தல் போன்ற பணிகளை மிகவும் திறம்பட முன்னெடுக்க முடியும்.
இலங்கையின் பெருந்தோட்டப் பொருளாதாரத்தை நவீனமயமாக்கி, டிஜிட்டல் அரச நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கு இந்த ‘Plantation Sector DSS’ அமைப்பு மற்றொரு முக்கிய பங்கு வகிக்கும்.
இந்நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய உள்ளிட்ட இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய வளவாளர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.










