வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களின் போது, தனது பச்சிளங் குழந்தையைக் காப்பாற்றிவிட்டு தாயொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெனிசுலா நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் ஹெக்டர் பெல்லோ மற்றும் உள்ளூர் ஊடகங்கள் சில மேற்படி தகவலை வெளியிட்டுள்ளன.
கால்பந்து வீரர் ஹெக்டர் பெல்லோவின் மனைவியான ஆன்ட்ரியா (Andrea), இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்ட தருணத்தில் தனது மகளைக் காப்பாற்றத் தனது உயிரைத் தியாகம் செய்துள்ளார்.
கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து ஆன்ட்ரியாவின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரது மகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.
இதுகுறித்து ஹெக்டர் பெல்லோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்:
“உயிரின் கடைசி மூச்சு இருக்கும் வரை அவளைக் கைவிடாமல், நமது மகளுக்காக நீ எப்படி உன் உயிரைக் கொடுத்தாய் என்ற கதையை அவளிடம் நான் நிச்சயம் சொல்வேன் என் அன்பே”.
காயமடைந்த அவரது மகள் மற்றும் அவரது சகோதரி (குழந்தையின் அத்தை) தற்போது கராகஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரபலங்களின் குடும்பத்தினர் பலி
புதன்கிழமை ஏற்பட்ட இந்த இரட்டை நிலநடுக்கப் பேரிடரில் சிக்கிப் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பலரது விபரங்கள் வெளியாகி வருகின்றன.
இளம் கால்பந்து வீரர்கள் பலி
வெனிசுலா கால்பந்து கூட்டமைப்பு (FVF) மற்றும் உள்ளூர் கிளப்புகள் தெரிவித்துள்ள தகவலின்படி, இரண்டு இளம் கால்பந்து வீரர்கள் இந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
கராகஸ் கால்பந்து கிளப்பின் (Caracas Fútbol Club) 18 வயதுக்குட்பட்டோருக்கான வீரர் ரசான் சிஜா (Razan Sijaa) மற்றும் கிளப் ஸ்போர்ட் சான் அகஸ்டின் அகாடமியைச் சேர்ந்த விக்டர் பாலாசியோஸ் (Victor Palacios) ஆகிய இருவருமே பலியாகியுள்ளனர்.
முன்னாள் மிஸ் வெனிசுலாவின் தாய் மரணம்
முன்னாள் ‘மிஸ் வெனிசுலா’ அழகி ஜிசெல் ரெய்ஸ் (Giselle Reyes) என்பவரின் தாயாரும் லாகுவைரா (La Guaira) பகுதியில் உள்ள தங்களின் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் முற்றிலும் இடிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.
நிலநடுக்கத்தின் அதிர்ச்சி மற்றும் தாக்கம் காரணமாக அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் இருந்த செவிலியர் உயிருடன் மீட்கப்பட்டு இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார்.
தலைநகர் கராகஸ் அருகே ஏற்பட்ட இந்த இரட்டை நிலநடுக்கங்களால் இதுவரை குறைந்தது 920 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 3,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.










