இலங்கைக்கான கொரியக் தூதுவர் Miyon Lee, (01 ஜூலை) கொழும்பிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இதன்போது, இலங்கைக்கும் கொரியக் குடியரசிற்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பரஸ்பர அக்கறை கொண்ட விடயங்கள் குறித்து சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றது.
மேலும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, இராணுவப் பயிற்சி மற்றும் பரிமாற்றத் திட்டங்கள், திறன் மேம்பாடு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டன.
இலங்கை முப்படையினருக்கு கொரியாவில் பயிற்சி வாய்ப்புகளை வழங்குதல், பாதுகாப்புத் துறை தொடர்பான சர்வதேச கண்காட்சிகள், மற்றும் கூட்டு இராணுவப் பயிற்சிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
பாதுகாப்பு செயலாளர், இலங்கைக்கு கொரியக் குடியரசு தொடர்ந்து வழங்கி வரும் ஒத்துழைப்பிற்கும் ஆதரவிற்கும் தனது பாராட்டைத் தெரிவித்தார்.
அதேவேளை, கொரிய தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்தி, நெருக்கமான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான தமது நாட்டின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தினார்.
