நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்கள் குறித்து நாடாளுமன்றத்தில் அவசர விவாதமொன்றை நடத்துமாறு கோரி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் பிரேரணை ஒன்றை இன்று (07) சமர்ப்பித்துள்ளனர்.
2020 ஆம் ஆண்டு சிறைச்சாலை கலவரம் ஒன்றின் போது, தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆற்றிய உரையொன்றை (2020 நவம்பர் 30ஆம் திகதியிட்ட ஹன்சாட் அறிக்கை – தொகுதி 280, இலக்கம் 07) சுட்டிக்காட்டி இந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதில், ” சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் அரசாங்கத்தின் பொறுப்பில் இருப்பவர்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
அவர்கள் விளக்கமறியலில் உள்ளவர்களாகவோ அல்லது தண்டனை பெற்ற கைதிகளாகவோ இருக்கலாம்; ஆனால், அவர்கள் அரசாங்கத்தின் பாதுகாப்பிலேயே இருக்கிறார்கள்.
எனவே, அரசாங்கத்தின் பொறுப்பிலுள்ள கைதிகள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உயிர் பாதுகாப்புத் தொடர்பிலான அடிப்படைப் பொறுப்பு அரசாங்கத்திற்கே உரியது” என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அன்று கூறியிருந்ததை எதிர்க்கட்சியினர் நினைவுபடுத்தியுள்ளனர்.
கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைகளைக் குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சி, இந்த மோதல்களில் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உட்பட 26 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100-இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன எனக் கூறியுள்ளது.
எனவே, இந்த மரணங்கள் மற்றும் காயங்கள் தொடர்பிலான முழுமையான பொறுப்பை தற்போதைய அரசாங்கமே ஏற்க வேண்டும். இவ்விடயத்தின் பாரதூரத்தன்மை மற்றும் அவசரத் தன்மையைக் கருத்திற்கொண்டு, இது குறித்து நாடாளுமன்றத்தின் உடனடி கவனத்தை ஈர்ப்பதற்காக நிலையியற் கட்டளை 19(1) இன் கீழ் அவசர ஒத்திவைப்பு விவாதமொன்றை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என எதிரணி கையித்த பிரேரணையில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.










