“நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தில் ஆளுங்கட்சியின் அரசியல் தலையீடு எதுவும் இல்லை. எனவே, வெலிக்கடை சிறைச்சாலை சம்பவத்துடன், இதனை ஒப்பிடுவது தவறு.” என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிரான நடவடிக்கை என்பவற்றில் அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டுவருகின்றது.
இவர்களுடன் தொடர்புபட்ட ஊழல் மிக்க அரசியல்வாதிகள் வெளியில் உள்ளனர். அவர்களுக்கு வழக்குகள் தொடுக்கப்பட்டுவருகின்றன.
எனவே, நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் எமக்கு சந்தேகம் உள்ளது.போதை ஒழிப்பு மற்றும் பாதாள குழுவுக்கு எதிராக செயல்படும் அரசுமீது தொடுக்கப்பட்ட நடவடிக்கையா என்ற சந்தேகமும் உள்ளது.எனவே, விசாரணைகள் மூலம் உண்மை கண்டறியப்பட வேண்டும். எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.
இரவுவேளையிலேயே வன்முறையை இலகுவில் செய்யலாம். ஆனால் அப்படி நடக்கவில்லை. இரவு நிலைமை அமைதியாக இருந்தது. ஆனால் காலையில் திடீரென அசம்பாவிதம் நடந்துள்ளது. எனவே, இது திட்டமிட்ட செயலா என்ற ஐயப்பாடும் உள்ளது எனவும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் இன்று குறிப்பிட்டார்.










