16 வயதிற்குட்பட்ட சிறுவர்களிடையே சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்வது அல்லது கட்டுப்படுத்துவது தொடர்பான முன்மொழிவுகளை ஆராய்வதற்காக, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு முதற்கட்டப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களால் ஏற்படும் சமூக, மனரீதியான மற்றும் ஆரோக்கிய பாதிப்புகள், டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து இந்த ஆலோசனைகளில் கவனம் செலுத்தப்படுவதாக பிரதமர் கூறினார்.
16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான தேசிய வழிகாட்டுதல்களை வரைவு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அத்துடன் சிறுவர்களின் மன-உடல் நலனைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மொபைல் போன் (கைபேசி) அடிமைத்தனத்திலிருந்து மீள்வதற்கு உதவும் வகையில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும், அது ஏற்கனவே சாதகமான முடிவுகளைக் காட்டியுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (08) உரையாற்றியபோதே பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்த விபரங்களை வெளியிட்டார்.










