சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார்

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார். அவருக்கு வயது 79. அவரது இறுதிப் பயணத்துக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

தமிழ் இலக்கியத்துக்கு பேரிழப்பாக பார்க்கப்படும் அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள், வாசகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 1947-ல் ஆண்டிபட்டியில் அவர் பிறந்தார். இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்ட அவர், பல்வேறு சிறுகதைகள், நாவல்களை எழுதி உள்ளார். வெக்கை, பிறகு, வாய்க்கால், வரப்புகள், அஞ்ஞாடி போன்ற நாவல்கள் அவரது எழுத்தில் புகழ் பெற்றவை.

‘அஞ்ஞாடி’ நாவல்

‘அஞ்ஞாடி’ நாவலுக்காக எழுத்தாளர் பூமணிக்கு 2014-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டது.

தலித் படைப்பிலக்கியம் என்ற வகைமை உருவாகும் முன்பே ஒடுக்கப்பட்ட சமூகத்தைப் பின்னணியாக கொண்டு ‘பிறகு’ என்ற கலாபூர்வமான நாவலை எழுதியவர் பூமணி.

சிறுகதை, மொழிபெயர்ப்பு, சினிமா என பல தளங்களில் இயங்கி வந்த கரிசல் காட்டுப் படைப்பாளியான பூமணி பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்து எழுதிய பிரமாண்ட வரலாற்று நாவலான ‘அஞ்ஞாடி’-க்கு 2014-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட ‘அஞ்ஞாடி’ நாவலை ஒரு கலைப்படைப்பாகவும் மானுடவியல் ஆவணமாகவும், வெவ்வேறு சமூகங்களின் வரலாற்று நூலாகவும் வாசிக்க முடியும் என்பது இலக்கிய விமர்சகர்களின் பார்வை.

வெக்கை – அசுரன்

1982-ல் வெளியானன இவரது ‘வெக்கை’ நாவல், சிறுவன் சிதம்பரத்தையும் அவனது தந்தை பரமசிவனையும் மையமிட்டிருப்பது. ஒரு குற்றத்தையும், அதைத் தொடர்ந்த அவர்களின் தலைமறைவு வாழ்க்கையையும் பேசும் இந்நாவல் வெற்றிமாறனின் இயக்கத்தில் ‘அசுரன்’ திரைப்படமாக வெளிவந்தது.

அரசு மரியாதை: முதல்வர் அறிவிப்பு

முதல்வர் விஜய் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரும், தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க படைப்பாளருமான பூலித்துரை மாணிக்கவாசகம் எனும் பூமணி அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.

பூமணி கரிசல் நிலத்தின் மண் வாசனையும், அடித்தட்டு மக்களின் வாழ்வின் நுட்பமான யதார்த்தங்களும், வரலாற்றின் ஆழமான சாட்சியங்களும் நிரம்பிய படைப்புகளின் மூலம் தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்திய முக்கியமான படைப்பாளி ஆவார்.

அவரது ‘அஞ்ஞாடி’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றது, அவரது இலக்கிய ஆளுமைக்கு கிடைத்த உயரிய அங்கீகாரமாகும். மேலும், அவரது ‘வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான ‘அசுரன்’ திரைப்படம், அவரது எழுத்தின் வீச்சை உலகறியச் செய்தது.

பூமணி அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தமிழ் இலக்கிய உலகத்தைச்

சேர்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலக்கியத் துறையில் பூமணியின் பங்களிப்பைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது இறுதிப் பயணத்துக்கு அரசு மரியாதை வழங்கப்படும்” என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles