பத்தாண்டுகளில் இலங்கையில் பிறப்பு வீதம் கடுமையாக வீழ்ச்சி

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டு வரையிலான தசாப்த காலத்தில் இலங்கையில் பிறப்புகளின் எண்ணிக்கை சுமார் 120,000 ஆல் வீழ்ச்சியடைந்துள்ளது.

பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்து வரும் பின்னணியில், குழந்தை பிறப்பை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் தேவையான ஆதரவையும் சலுகைகளையும் வழங்கும் என்று பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பிறப்புகளின் எண்ணிக்கை 2015 முதல் 2025 வரை தொடர்ந்து குறைந்து வந்துள்ளதுடன், 2019ஆம் ஆண்டிற்குப் பின்னரே இந்த வீழ்ச்சி மிகவும் அதிகமாக மாறியுள்ளது.

அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, இலங்கை 2019ஆம் ஆண்டில் 319,010 குழந்தைகள் உயிருடன் பிறந்தன.

இந்த எண்ணிக்கை 2020 இல் 301,706 ஆகவும், 2021 இல் 284,848 ஆகவும், 2022 இல் 275,321 ஆகவும், 2023 இல் 247,900 ஆகவும், 2024 இல் 220,761 ஆகவும், 2025 இல் 214,570 ஆகவும் குறைந்துள்ளது.

இந்த புள்ளிவிவரங்கள் 2019 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பிறப்புகளில் தோராயமாக 33 சதவீத வீழ்ச்சியைக் காட்டுகின்றன.

தாமதமான திருமணங்கள், குறைந்த திருமண விகிதங்கள், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, இனப்பெருக்க வயதிலுள்ள இளைஞர்களின் வெளிநாட்டு இடம்பெயர்வு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு காரணமாக தம்பதியினர் பிரிந்திருத்தல், சிறிய குடும்பங்களுக்கான விருப்பம் அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களை அதிகாரிகள் இந்த வீழ்ச்சிக்கு அடையாளப்படுத்தியுள்ளனர்.

உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பு, குடும்பக் கட்டுப்பாடு குறித்த மாறிவரும் அணுகுமுறைகள், கருத்தடை முறைகளின் பயன்பாடு மற்றும் கருவுறுதல் தொடர்பான பிரச்சினைகளும் பிறப்பு விகிதம் குறைவதற்கு பங்களித்துள்ளன.

நீண்ட கால அடிப்படையில் மக்கள் தொகை ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு இலங்கைக்கு ஆண்டுதோறும் மதிப்பிடப்பட்ட 330,000 முதல் 360,000 பிறப்புகள் தேவைப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், 2025 இல் பதிவான பிறப்புகளின் எண்ணிக்கை (214,570) அந்த மட்டத்தை விட மிகவும் குறைவாகவே உள்ளது.

Related Articles

Latest Articles