ஹட்டன் நகரில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளின் முன்பகுதி பாதுகாப்புக் கவசத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்த சம்பவம் இன்று (13) சுமார் 3.40 மணியளவில் இடம்பெற்று, அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஹட்டன் நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்கு பொருட்கள் வாங்கச் சென்றிருந்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளர், தனது வாகனத்தை வீதியோரமாக நிறுத்திவிட்டு சென்றிருந்தார். அந்த நேரத்தில், மோட்டார் சைக்கிளின் முன்பகுதி பாதுகாப்புக் கவசத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, அருகில் சென்ற ஒருவர் அந்தப் பாம்பு கவசத்திற்குள் இருந்து தலையை வெளியே நீட்டி எட்டிப்பார்த்ததை கண்டு அதிர்ச்சியடைந்து, அங்கிருந்தவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார்.
தகவல் அறிந்ததும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
பின்னர், அங்கிருந்த சிலர் மிகவும் அவதானமாக செயல்பட்டு, மோட்டார் சைக்கிளின் கவசப் பகுதியை தடியின் ஊடாக பாம்பை பாதுகாப்பாக வெளியே எடுத்தனர். அதன் பின்னர், அந்தப் பாம்பிற்கு எந்தவித சேதமும் ஏற்படாத வகையில் ஹட்டன் புகையிரத பாதைக்கு அண்மையிலுள்ள புதர்ப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.
மலைவாஞ்ஞன்










