லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்ரகந்த பகுதியில் நேற்று மாலை நீரில் மூழ்கி காணாமல்போன மாணவன், இன்று (14) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அக்ரகந்த, ஆக்ரா ஆற்றுக்குக் குளிப்பதற்காகச் சென்ற மாணவர்களில் ஒருவரே நேற்று மாலை நீரில் மூழ்கி இவ்வாறு காணாமல்போயிருந்தார். தரம் 10 இல் கல்வி பயிலும் பரமநாதன் கிசோத் என்ற மாணவனே இவ்வாறு துரதிர்ஷ்டவசமாகக் நீரில் மூழ்கியுள்ளார்.
இதனையடுத்து, லிந்துலை பொலிஸாரும் பிரதேச மக்களும் இணைந்து நேற்று மாலை முதல் ஆற்றில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். எனினும், ஆற்றில் நீர்வரத்து அதிகமாகக் காணப்பட்டமையால் நேற்றைய தேடுதல் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
இதனைத் தொடர்ந்து, இன்று கடற்படைச் சுழியோடிகளின் உதவியுடன் இரண்டாவது நாளாகத் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையிலேயே, இன்று பிற்பகல் காணாமல்போன மாணவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டு கரைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கான சட்டரீதியான விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்படவுள்ளது. அங்கு உரிய மருத்துவ – சட்ட நடைமுறைகள் முடிந்த பின்னர், சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
– கௌசல்யா










