கதிர்காம பாதயாத்திரையில் மேலும் ஒரு உயிர் பலி! பக்தர்களின் பாதுகாப்பு குறித்து தீவிர விவாதம்

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம பாதயாத்திரையில் கலந்துகொண்ட மேலும் ஒரு பக்தர் நேற்று முன்தினம் (ஜூலை 12) துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.

நற்பிட்டிமுனையைச் சேர்ந்த நடராஜா அருள்குமார் என்ற பக்தர், அம்பாறை – பாணமை பகுதியைக் கடந்து பயணித்துக் கொண்டிருந்தபோது இவ்வாறு மரணமடைந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

கதிர்காம பாதயாத்திரை வரலாற்றை நோக்குகையில், இந்த ஆண்டு வழிபாட்டுக் காலத்திற்குள் பதிவான இரண்டாவது மரணம் இதுவாகும். இதற்கு முன்னர் கடந்த ஜூலை 8ஆம் திகதி பொத்துவில் – குண்டுமடு காட்டுப் பகுதியில் வைத்து, வவுனியாவிலிருந்து வந்திருந்த மற்றொரு பக்தர் உயிரிழந்தார்.

நேற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து குமண தேசிய பூங்காவின் ஊடாக அடர்ந்த காட்டுப் பாதை வழியே நூற்றுக்கணக்கான மைல்கள் செல்லும் இந்த பாதயாத்திரை, நாட்டின் மத நல்லிணக்கத்தின் மாபெரும் அடையாளமாகத் திகழ்கிறது.

தேசிய மற்றும் சர்வதேச சுற்றுச்சூழல் அறிக்கைகளின்படி, தற்போது நிலவும் கடுமையான வறண்ட காலநிலை, நீர்ச்சத்து குறைபாடு, வனவிலங்கு அச்சுறுத்தல் மற்றும் காட்டுப் பாதைகளுக்குள் உள்ள மட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகள் காரணமாக, முதியவர்கள் கடுமையான சுகாதார அபாயங்களை எதிர்கொள்கின்றனர்.

வனஜீவராசிகள் திணைக்களம், பாதுகாப்புப் படையினர், தொண்டு நிறுவனங்கள் இணைந்து பக்தர்களுக்குத் தேவையான நீர், உணவு, முதலுதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ள போதிலும், இவ்வாறான திடீர் மரணங்களைத் தடுப்பதற்கு காட்டுப் பாதைகளுக்குள் நடமாடும் மருத்துவ முகாம்களை (Mobile Medical Units) மேலும் பலப்படுத்த வேண்டும் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பக்தி மற்றும் ஆன்மீக நம்பிக்கையை முன்வைத்து கதிர்காம கந்தனுக்காக கடினமான பயணத்தை மேற்கொள்ளும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும், அவர்களைத் தொடர்ச்சியான மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்துவதும் அதிகாரிகளினதும் ஏற்பாட்டாளர்களினதும் பொறுப்பாகும்.

Related Articles

Latest Articles