இந்தியாவின் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்தை வென்ற முன்னாள் கிரிக்கெட் வீரரும், லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் யாழ்ப்பாணம் கிங்ஸ் (Jaffna Kings) அணியின் இணை உரிமையாளருமான மன்ஜோத் கல்ரா, வீரர் ஒருவருக்கு ஆட்ட நிர்ணய சதி முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2026 எல்.பி.எல். (LPL) பருவகாலத்தின் ஆரம்பப் போட்டிக்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னதாக, விளையாட்டுத் துறையுடன் தொடர்புடைய குற்றங்களைத் தடுப்பதற்கான விசேட விசாரணைப் பிரிவினால் (SIU) வியாழக்கிழமை இரவு இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸாரின் தகவல்களின்படி, போட்டியின் முடிவை மாற்றுவதற்காக வீரர் ஒருவருக்கு 9.5 மில்லியன் ரூபாயை (சுமார் 28,700 அமெரிக்க டொலர்) வழங்க முயன்றபோது, கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து கல்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஆட்ட நிர்ணய சதி முயற்சி குறித்து சம்பந்தப்பட்ட வீரர் சுமார் 10 நாட்களுக்கு முன்பே முறைப்பாடு செய்திருந்ததாகவும், அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்தே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்ததுடன், கல்ரா கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
கேப்டன் பிரித்வி ஷா, சுப்மன் கில், அர்ஷ்தீப் சிங் மற்றும் சிவம் மாவி உள்ளிட்ட எதிர்கால சர்வதேச நட்சத்திரங்களுடன் இணைந்து 2018 ஐசிசி 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணியில் கல்ரா இடம்பெற்றிருந்தார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஆட்டமிழக்காமல் சதம் அடித்து இந்தியாவின் கிண்ண வெற்றியில் அவர் முக்கிய பங்கு வகித்ததுடன், 2026 எல்.பி.எல். தொடருக்கு முன்னதாக யாழ்ப்பாணம் கிங்ஸ் அணியின் உரிமையாளர் குழுவின் ஒரு பகுதியாக அவர் அறிவிக்கப்பட்டிருந்தார்.
இந்தக் கைதைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி லங்கா பிரீமியர் லீக் 2026 தொடர் இன்று மாலை கொழும்பு எஸ்.எஸ்.சி. (SSC) மைதானத்தில் ஆரம்பமாகும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த விசாரணையின் போது ஏதேனும் உதவி தேவைப்பட்டால் விசேட விசாரணைப் பிரிவுக்கு (SIU) முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம், ஊழல், முறைகேடுகள் மற்றும் நெறிமுறையற்ற செயல்களுக்கு எதிராகத் தங்களின் சகிப்புத்தன்மையற்ற (Zero-tolerance) கொள்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளதுடன், லீக் தொடருடன் தொடர்புடைய எந்தவொரு தரப்பினரின் தவறான செயற்பாடுகளையும் பொறுத்துக் கொள்ளப்போவதில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
தங்களின் ஊழல் தடுப்புப் பிரிவு, தொடரின் ஊழல் தடுப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக விசேட விசாரணைப் பிரிவுடன் (SIU) நெருக்கமாக பணியாற்றி வருவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. அத்துடன், நியாயமான, வெளிப்படையான மற்றும் ஊழலற்ற தொடரை உறுதி செய்வதற்காக, போட்டி முழுவதும் நிபுணர் ஆதரவையும் விழிப்புணர்வையும் வழங்க ‘இன்டெக்ரிட்டி மென்டர்ஸ்’ (Integrity Mentors) என்ற சுயாதீன விளையாட்டு நெறிமுறை அமைப்பையும் அது ஈடுபடுத்தியுள்ளது.
விளையாட்டுத் துறையுடன் தொடர்புடைய குற்றங்களைத் தடுக்கும் 2019 ஆம் ஆண்டின் சட்டத்தின் கீழ், ஆட்ட நிர்ணயம், ஸ்பாட் பிக்சிங், லஞ்சம் மற்றும் விளையாட்டில் முறைகேடு செய்யும் பிற வடிவங்களை இலங்கை குற்றவியல் குற்றமாக அறிவித்துள்ளதுடன், விளையாட்டில் உலகின் மிகக் கடுமையான ஊழல் தடுப்புச் சட்டங்களைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது. இக்குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கணிசமான அபராதங்கள் மற்றும் சிறைத்தண்டனைகள் விதிக்கப்படலாம்.
டம்புள்ள தண்டர்ஸ் (Dambulla Thunders) அணியின் உரிமையாளர் தமீம் ரஹ்மான், வீரர் ஒருவரைத் தூண்ட முயன்றமை மற்றும் பந்தயங்களை ஏற்பாடு செய்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு இந்த புதிய கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. அவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், 24 மில்லியன் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த புதிய வழக்கு குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.










