தபால் பொதிகள் மூலம் போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பு

சர்வதேச தபால் பொதிகள் மூலமாக நாட்டிற்குள் போதைப்பொருட்களைக் கடத்தும் போக்கு அதிகரித்து வருவதாகவும், சோதனைகளில் இருந்து தப்பிப்பதற்காகக் கடத்தல்காரர்கள் சிறிய அளவிலான பொதிகளைப் பெருமளவில் பயன்படுத்தி வருவதாகவும் இலங்கை சுங்கத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து வியாழக்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய சுங்க ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா, 2026 ஜூன் மாதத்தில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நான்கு போதைப்பொருள் கண்டறிதல் நடவடிக்கைகளையும், தபால் பொதிகள் தொடர்பான ஒன்பது சோதனைகளையும் சுங்கத் திணைக்களம் மேற்கொண்டதாகக் குறிப்பிட்டார். இந்த ஒட்டுமொத்த நடவடிக்கைகளின் மூலம் மொத்தம் 83.2 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஜூன் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனைகளில் விமான நிலையக் கண்டறிதல்களும் அடங்கும் என்ற போதிலும், தபால் பொதிகள் மூலம் நாட்டிற்குள் போதைப்பொருட்களைக் கடத்தும் முறை தற்பொழுது பெரும் கவலையளிக்கும் விடயமாக மாறியுள்ளதாக புஞ்சிஹேவா சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கு நாள்தோறும் வரும் சர்வதேச தபால் பொதிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால், ஒவ்வொரு பொதியையும் தனித்தனியாக நேரில் சோதிப்பது சாத்தியமற்றது என்றும், இதனால் சுங்கத் திணைக்களம் விரிவான சோதனைகளை நடத்துவதற்கு முன்பாக, சந்தேகத்திற்கிடமான பொதிகளைக் கண்டறிய ஸ்கேனர் (Scanner) தொழில்நுட்பத்தையே நம்பியிருக்கிறது என்றும் அவர் விளக்கினார்.

மேலும், தபால் வலையமைப்பின் ஊடாக இலங்கைக்குள் “குஷ்” (Kush) ரக போதைப்பொருளைக் கடத்துவதற்கான முயற்சிகள் அதிகரித்திருப்பதை அதிகாரிகள் அவதானித்துள்ளதாகவும், அவ்வாறு இடைமறிக்கப்பட்ட பல பொதிகள் தாய்லாந்திலிருந்து அனுப்பப்பட்டவை என்றும் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

தனித்தனிப் பொதிகளில் கண்டறியப்படும் போதைப்பொருளின் அளவு ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், அதன் ஒட்டுமொத்த தாக்கம் மிகவும் பாரதூரமானது என்று அவர் எச்சரித்தார்.

நாட்டில் பறிமுதல் செய்யப்படும் ஒட்டுமொத்த போதைப்பொருள் அளவோடு ஒப்பிடுகையில் இந்த 83.2 கிலோகிராம் என்பது சிறியதாகத் தோன்றினாலும், இதனால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்பு மிகப்பெரியது என்றும், இந்த பொதிகள் நேரடியாகப் பயன்படுத்துபவர்களின் முகவரிக்கே அனுப்பப்படலாம் என்றும் அவர் கூறினார்.

அத்துடன், கடத்தல்காரர்கள் இவற்றை விற்பனை செய்வதற்கு முன்னதாக, இதன் அளவை அதிகரிப்பதற்காகப் பிற பொருட்களுடன் கலந்து விநியோகிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles