உலகக் கோப்பை பங்குகளை விற்கும் திட்டத்தைக் கைவிட்டது ஃபீஃபா

கடும் எதிர்ப்பு மற்றும் தொடர் புறக்கணிப்பு மிரட்டல்களைத் தொடர்ந்து, உலகக் கோப்பை போட்டிகளின் பங்குகளை விற்கும் திட்டத்தை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) முழுமையாகக் கைவிட்டுள்ளது.

இது தொடர்பாக சனிக்கிழமை காலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட பீ பா தலைவர் ஜியானி இன்ஃபாண்டினோ (Gianni Infantino),

“ஆரம்பத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கு ஏற்ப இத்திட்டம் இனி செயல்படாது என்பதும், ஆதரவு எந்த அளவில் இருந்தாலும் இத்திட்டம் பல்வேறு பிரிவினைகளை உருவாக்கியுள்ளது என்பதும் தெளிவாகியுள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.

“ஒன்றிணைப்பதும், கால்பந்து விளையாட்டை மேம்படுத்துவதுமே எப்போதும் எங்களது நோக்கமாகும். எனவே, இந்த முன்மொழிவு இனி முன்னெடுத்துச் செல்லப்படாது.

இனிவரும் நாட்களில், விளையாட்டின் பொதுவான நலனைக் கருத்தில் கொண்டு, அனைத்துத் தரப்பினரையும் மீண்டும் ஒன்றிணைப்பதே எனது நோக்கமாகும்.

குறிப்பாக எங்களது ஆதரவு அதிகம் தேவைப்படும் நாடுகளில் கால்பந்தைப் தொடர்ந்து வளர்ப்பதே இலக்கு,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலகக் கோப்பை உள்ளிட்ட தனது முதன்மை தொடர்களை இயக்குவதற்காக ‘பீபா பார்வர்ட் என்டர்பிரைஸ்’ (FIFA Forward Enterprise) என்ற வணிக ரீதியிலான கிளை நிறுவனத்தை உருவாக்க பீபா கடந்த புதன்கிழமை திட்டமிட்டிருந்தது.

சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இந்த நிறுவனத்தின் 20 சதவீதம் வரையிலான சிறுபான்மை பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்கள் வாங்க அனுமதிக்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இத்திட்டத்திற்கு ஒப்புக்கொண்டால், 2027-2030 காலகட்டத்தில் தனது 211 உறுப்பு நாடுகளுக்குத் தலா 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதாகவும் பீபா வாக்குறுதி அளித்திருந்தது.

இருப்பினும், இத்திட்டத்திற்கு உலகம் முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. ஐரோப்பிய கால்பந்து அமைப்பான ‘யுவேபா’வின் (UEFA) 55 உறுப்பு நாடுகளும், பீபாவின் அனைத்துத் தொடர்களையும் புறக்கணிக்கப்போவதாக ஏகமனதாக வாக்களித்தன.

மேலும், வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளுக்கான (CONCACAF) அமைப்பும், ஆஸ்திரேலியா அடங்கிய ஆசிய கால்பந்து கூட்டமைப்பும் (AFC) இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

இந்த முன்மொழிவு பீ பா அமைப்பிற்குள்ளேயே பெரும் பிளவை ஏற்படுத்தியது.

இன்பாண்டினோவின் மூத்த ஆலோசகர் கார்போஸ் கோர்டீரோ (Carlos Cordeiro) தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், இத்திட்டம் “கால்பந்து விளையாட்டுக்கு ஒரு மோசமான ஒப்பந்தம்” என்று விமர்சித்தார்.

Related Articles

Latest Articles