மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்திற்குட்பட்ட மஸ்கெலியா மற்றும் நோர்ட்டன் பிரிட்ஜ் போன்ற பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக மலையகப் பகுதியில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகின்றது.
இன்று காலை நிலவரப்படி, விமல்சுரேந்திர நீர்த்தேக்கம் வான்பாய்ந்து மதகுகள் வழியே நீர் வெளியேறி வருகின்றது.
அத்துடன் மவுசாக்கலை, கென்யோன், புரோட்லேண்ட், லக்ஸபான, பொல்பிட்டிய, நவலக்ஸபான மற்றும் காசல்ரீ ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் உயர்ந்து வருகின்றது.
இதேபோன்று தொடர்ந்தும் கனமழை பெய்யும் பட்சத்தில், பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்படும் நிலை ஏற்படும் என நுவரெலியா மாவட்ட இடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
எனவே, நீர்த்தேக்கங்களை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அனைவரும் மிகுந்த விழிப்புடனும் அவதானத்துடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்
