நாட்டின் மேற்குத் திசையில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற வானிலை மற்றும் காற்றின் வேகம் அதிகரிப்பு காரணமாக, யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார், புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தால் இன்று காலை விசேட அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, மேற்குறிப்பிட்ட கடற்பகுதிகளில் கரையோர மீன்பிடியில் ஈடுபடும் சிறிய மற்றும் ஒருநாள் மீன்பிடிப் படகுகள் மறுஅறிவித்தல் வரை மீன்பிடிக்காகக் கடலுக்குச் செல்வது மிகவும் ஆபத்தானது என்பதால், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அந்நடவடிக்கைகளிலிருந்து தவிர்ந்திருக்குமாறும், ஏற்கனவே கடலுக்குச் சென்ற படகுகள் ஏதேனும் இருப்பின் விரைவாகவும் பாதுகாப்பாகவும் கரைக்குத் திரும்புமாறும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த அறிவித்துள்ளார்.
