கொட்டகலையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த ஜீவன் தொண்டமான்
சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இன்று (10) விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளையும் தேவைகளையும் கேட்டறிந்தார்.
கடந்த வாரம் பெய்த கடும் மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட திம்புல்ல கீழ் பிரிவு, ஸ்டோனிகிளிப் கீழ் பிரிவு, ஸ்டோனிகிளிப் டி.பி பிரிவு மற்றும் லொக்கில் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் பல வீடுகளும் மக்களின் உடைமைகளும் சேதமடைந்திருந்தன.
இதன் காரணமாக வீடுகளை இழந்து தற்காலிக மண்டபங்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் தங்கியுள்ள மக்களை நேரில் சந்தித்த ஜீவன் தொண்டமான், அவர்களின் தற்போதைய நிலைமை, எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் அவசரத் தேவைகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார்.
அபாயப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நீண்டகால அடிப்படையில் பாதுகாப்பான இடவசதிகளை ஏற்படுத்துவது அவசியம் என சுட்டிக்காட்டிய அவர், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பாதுகாப்பான இடங்களில் காணிகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட பெருந்தோட்டக் கம்பனிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
அத்துடன், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்று, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து கவனம்:
இதேவேளை, இச்சந்திப்பின் போது பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் தொழில்சார் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்தும் ஜீவன் தொண்டமான் கேட்டறிந்துகொண்டார். நாளாந்த சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், அதற்கேற்ப பணிச்சுமையும் தொழில் அழுத்தமும் அதிகரித்துள்ளதால் தாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகத் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டினர்.
தொழிலாளர்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி, நடைமுறைக்குச் சாத்தியமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜீவன் தொண்டமான் உறுதி அளித்தார்.
மேலும், மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது அரசியல் நிலைப்பாடுகளைக் கடந்து முன்னெடுக்கப்பட வேண்டிய பொறுப்பு எனக் குறிப்பிட்ட அவர், “கடந்த காலங்களில் அரசாங்கத்துடன் இணைந்து நின்று மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்ததைப் போன்று, தற்போது எதிர்க்கட்சியில் இருந்தாலும் மக்களின் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அர்ப்பணிப்புடன் செயற்படும்” எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பி. சக்திவேல், கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர் ராஜமணி பிரசாந்த், நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் ரவி குழந்தைவேல், இ.தொ.கா. காரியாலய உத்தியோகத்தர்கள் மற்றும் இளைஞர் அணியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.










