தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏதேச்சாதிகாரப் பாதையில் பயணித்துக்கொண்டிருப்பதாகவும், இதற்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண அறைகூவல் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:
“ நீதிமன்றம், காவல்துறை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளை அரசியல்மயப்படுத்த முற்படுவதானது நாட்டின் ஜனநாயகத்திற்கே பெரும் தீங்கை விளைவிக்கும்.இன்று காவல்துறையை மட்டுமன்றி, நீதித்துறையையும் அரசியல்மயமாக்குவதற்கு இந்த அரசாங்கம் தீவிரமாக முயற்சித்து வருகிறது.
தேசிய மக்கள் சக்தியினருக்கு ஒரு சட்டமும், எதிரணியினருக்கு மற்றுமொரு சட்டமுமாகச் செயற்பட்டு, ஜனநாயகத்தைச் சீர்குலைத்து ஏகாதிபத்தியத்தை நோக்கி அரசாங்கம் பயணிக்கிறது. இந்த ஜனநாயக விரோதச் செயல்பாடுகளுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும்.
நாட்டில் உள்ள அனைத்துத் துறைகளுமே கடுமையான அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளன. இதன் வெளிப்பாடே தற்போதைய சிறைச்சால மோதல்களின் ஊடாகவும் எதிரொலிக்கிறது.
அதேவேளை, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் திட்டத்தைக் கைவிடுமாறு முழு நாடும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. எனவே, அந்தத் திட்டத்தை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும்” – என்றார் ஹர்ஷன ராஜகருண.










