கேகாலை, இரத்தினபுரியில் 168 பேருக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கிவைப்பு

சட்டத்தை சரியாக செயற்படுத்தும் அரசாங்கத்தை நீங்கள் நியமித்துள்ளீர்கள். அதனால் சந்தோசமாக இருக்கிறீர்கள். ஆனால் திருடர்கள் கலக்கமடைந்துள்ளனர். அதற்கு நாம் அஞ்சவில்லை என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (12.08.2026 ) கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 168 பேருக்கான காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர்,

இன்றைய நாள் இரத்தினபுரி மக்களுக்கு மிகவும் முக்கியமான நாளாகும். இத்தனை நாட்களாக . உங்களுக்கு காணிகள் இருந்தன. ஆனால் உறுதிப்பத்திரம் இருக்கவில்லை. காணி தொடர்பான ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் முதலில் காணி உரிமை இருக்கிறதா? என்ற கேள்வியைத் தான் கேட்பார்கள்.
எனவே இன்றிலிருந்து உங்களுக்கு உரிமையைப் பெற்றுக்கொடுக்கிறோம்.

தேசிய மக்கள் சக்தியின் “வளமான நாடு- அழகான வாழ்க்கை“ என்பதற்கு இணங்க நீங்கள் பெற்றுள்ள காணி உரித்து நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வழிசமைப்போம்.

எமது அரசாங்கத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது. நாளுக்கு நாள் மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கை அதிகரிக்கிறது.

உண்மையில் மக்கள் எங்கள் வேலைத்திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறார்கள். ஆனால் சிலர் நான்கு, 5 பேர் இணைந்து ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறார்கள்.

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுப்பெறும் வயதை அதிகரிப்பது தொடர்பில் எதிர்கட்சிகள் ஆங்காங்கே கலந்துரையாடினாலும் மக்களுக்கு அது பிரச்சினையில்லை. வழக்குகள் வேகமாக விசாரணை செய்யப்பட்டு வருவதால் திருடர்கள் கலவரமடைந்துள்ளனர் என்றார்.

இந்நிகழ்வில் காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் மஹிந்த செனரத் விதாரன,பாராளுமன்ற உறுப்பினர்களான சுனில் ராஜபக்ஸ, சாந்த பத்மகுமார, இரத்தினபுரி மாவட்ட செயலாளர் என்.ஜி.லலித் ஆனந்த, மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Articles

Latest Articles