பெருந்தோட்ட நிறுவனங்கள் இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட 53 வருட குத்தகை ஒப்பந்தம் 2045 ஆம் ஆண்டு முடிவுக்கு வருவதற்கு முன் தோட்ட குடியிருப்பாளர்களின் காணி உரிமை இறுதி செய்யப்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் , இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
குத்தகை ஒப்பந்தம் முடிவடைய இன்னும் 19 ஆண்டுகள் இருக்கின்ற நிலையில் குத்தகை ஒப்பந்தத்தை 99 வருடங்களாக நீடிக்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்கள் அரசாங்கத்தை கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கம் இந்த கோரிக்கையை சாதகமாக பரிசீலிப்பதாகவும் தெரிய வருகிறது.
பெருந்தோட்ட கம்பனிகள் குடியிருப்பாளர்கள் வசித்து வருகின்ற குடியிருப்புகள், காய்கறி தோட்டங்கள், கால்நடை வளர்ப்புக்கான புத்தரைகள், என்பவற்றையும் சேர்த்து குத்தகைக்கு பெற்றுள்ளன. அத்துடன் விளையாட்டு மைதானங்கள், வழிபாட்டு தளங்கள், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் போன்ற பொது பயன்பாட்டு பகுதிக்கும் இந்தக் குத்தகை பொருந்தும். .இது தோட்ட குடியிருப்பாளர்களுக்கு பெருத்த அசௌகரித்தை தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகிறது.
தோட்ட குடியிருப்பு பிரதேசத்துக்கும் பெருந்தோட்ட நிறுவனங்கள் குத்தகை செலுத்துவதால் அந்தப் பிரதேசத்துக்கும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதனால் கடந்த காலங்களில் தோட்ட முகாமைக்கும் தோட்ட குடியிருப்பாளர்களுக்கும் பாரிய அளவில் முருகல் நிலை ஏற்பட்டது வெளிப்படையான விடயமாகும்.
அத்துடன் தோட்ட நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படாதவர்கள் என்று இனம் காணப்படும் தோட்ட குடியிருப்பாளர்களை அரச காணி சட்டத்தை பயன்படுத்தி பெருந்தோட்ட அமைச்சின் மூலமாக குடியிருப்பு பிரதேசங்களை விட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளும் பாரிய அளவில் நடைபெற்றுள்ளன.
அரசாங்கம் குத்தகை ஒப்பந்தம் நீடிப்பு கோரிக்கையை பரிசீலிப்பதற்காக குழு ஒன்றை அமைத்திருப்பதாக அறிகிறோம். இக்குழு தோட்ட குடியிருப்பாளர்களின் தொடர் கோரிக்கையான காணி உரிமை பிரச்சனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தோட்ட குடியிருப்பாளர்களின் வீடு காணி பிரச்சனைக்கு ஒரு தீர்வு எட்டாமல் ஒப்பந்தத்தை நீடிப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு மலையக சமூகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
பெருந்தோட்ட கம்பெனிகளின் குத்தகை ஒப்பந்தம் முடிவடைவதற்கு இன்னும் 19 ஆண்டுகள் இருக்கின்ற நிலையில் குத்தகை ஒப்பந்தத்தை 99 வருடங்களுக்கு நீடிப்பதற்கு கம்பனி தரப்புகள் தற்போது இருந்தே முனைப்பு காட்ட தொடங்கிவிட்டன. இந்த நிலையில் தோட்ட குடியிருப்பு பிரதேசத்துக்கான உரிமையை நிலை நாட்டுவதில் மலையக சமூகமும் முனைப்பு காட்ட வேண்டும்.
பெருந்தோட்ட நிறுவனங்கள் தோட்டக் குடியிருப்பு பிரதேசத்துக்கு செலுத்தும் குத்தகையிலிருந்து அவர்களை விடுவித்து விட வேண்டும். தோட்ட குடியிருப்பு பிரதேசத்தின் முழு உரிமையும் அங்கு வாழுகின்ற மக்களுக்கு உரித்தாக்கப்பட வேண்டும். தோட்ட நிர்வாகங்களை பெருந்தோட்ட பயிர் செய்கை காணியுடன் மட்டுப்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் பெருந்தோட்டப் பயிர் செய்கை காணியை யார் நிர்வகிப்பது என்பதை மக்கள் தீர்மானத்துக்கு விட்டுவிட வேண்டும். எனவும் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.










