தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வழங்கும் நாளாந்தக் கொடுப்பனவு 500 ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும்

தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் தற்போது 200 ரூபாய் வரவுக்கான கொடுப்பனவாக வழங்கி வருகிறது. இத்தொகையை 500 ரூபாவாக அதிகரித்து அது பெருந்தோட்ட கம்பனிகள், மற்றும் தனியாருக்கு சொந்தமான தோட்டங்களில் வேலை செய்யும் சகல தொழிலாளர்களுக்கும் கிடைக்கக் கூடியதாக அமைய வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி தலைவரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

அரசாங்கம் கடந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு வருகை கொடுப்பனவாக 200 ரூபாய் வழங்கும் முறையை அறிவித்து நடைமுறைப்படுத்தியது.

வரலாற்றில் எந்த ஒரு அரசாங்கமும் செய்யாத துணிச்சலான இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியது வரவேற்கத்தக்க விடயமாகும். எனினும் இத்திட்டம் பல குறைபாடுகளை கொண்டிருக்கிறது.

பெருந்தோட்ட அமைச்சின் தகவலின் படி அரசாங்கத்தால் வழங்கப்படும் 200 ரூபாய் கொடுப்பனவை 73 500 பேர் வரையிலானவர்களோ பெற்று வருகின்றனர். தற்போது பெருந்தோட்டங்களில் 1 50,000 பேர் வரை வேலை செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒப்பந்த வேலை, தற்காலிக ஊழியர்கள், பறிக்கப்படும் கொழுந்துக்கு மட்டும் கொடுப்பனவை பெற்றுக் கொள்பவர்கள். அறுபது வயதை கடந்த ஓய்வுக்குப் பின் வேலை செய்யும் தொழிலாளர்கள், தனியாருக்கு சொந்தமான தோட்டங்களில் வேலை செய்கின்ற தொழிலாளர்கள் ஆகியோர் நாளொன்றுக்கு 200 ரூபாய் வழங்கும் கணக்கில் உள்ளடக்கப்படவில்லை.

சரியான முறையில் கணக்கெடுப்பு மேற்கொண்டால் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டு லட்சம் இருக்கலாம் என கருதுகிறோம்.

தோட்டங்களில் நிலையான தொழிலாளர்கள் செய்யும் வேலைக்கு எந்த விதத்திலும் குறையாத அளவில் ஏனைய வகைப்படுத்தலுக்கு உள்ளடக்கப்பட்டுள்ள தொழிலாளர்களும் வேலை செய்கின்றனர். ஆனால் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவு பாராபட்சமாகவும் ஏற்றத்தாழ் உடையதாகவும் காணப்படுகிறது.

இறுதியாக அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வு தொடர்பில் அரசாங்கத்துக்கும் பெருந்தோட்ட கம்பெனிகளுக்கும் இடையேயான உடன்படிக்கை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்படவில்லை.

இதனால் இவ்விடயத்தை தொழில் திணைக்களத்துக்கு கொண்டு செல்ல முடியாத நிலையை தொழிற்சங்கங்கள் எதிர் நோக்குகின்றன. தற்போது தொழிலாளர்கள் வேலை சுமை அதிகரிப்பு பிரச்சனையுடன் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு பிரச்சினையும் எதிர் நோக்குகின்றனர்.

இந்த நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் அறிவித்துள்ள 200 ரூபா கொடுப்பனவை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 500 ரூபாவாக அதிகரிக்க வேண்டும். அத்துடன் அதற்கேற்ற
விதாசாரத்தில் கம்பனிகளும், தனியார் தோட்ட உரிமையாளர்களும் சம்பள உயர்வை அதிகரிக்க வேண்டும்.

அத்துடன் தோட்டத்தில் வேலை செய்கின்ற சகலருக்கும் சம்பள உயர்வு கிடைக்கும் வகையில் சம்பள விடயம் திருத்தி அமைக்கப்பட்டு அது அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும். எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Articles

Latest Articles