‘டித்வா’ (Ditwah) சூறாவளி காரணமாக பதுளைப் பிரதேச செயலகப் பிரிவில் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீட்டுக் காசோலைகள் வழங்கும் நிகழ்வு, நேற்று (ஆகஸ்ட் 20) பதுளை மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்றது.
இதன்போது, பதுளைப் பிரதேச செயலகப் பிரிவில் புயலால் பாதிக்கப்பட்டுத் தகுதிபெற்ற 244 குடும்பங்கள் உட்பட முழுமையாக, அதிஉயர் அபாயகரமான நிலையில் மற்றும் பகுதியளவில் பாதிப்புகளை எதிர்நோக்கிய 248 பயனாளிகளுக்குக் காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மொத்தத் தொகை 83.5 மில்லியன் ரூபாவாகும் (83,500,000 ரூபா).
இதன் கீழ், வீடுகளை முழுமையாக இழந்த குடும்பங்களுக்கு தலா 50 லட்சம் ரூபா வீதம் வழங்கப்படவுள்ள நிலையில், புதிய வீடுகளைக் கொள்வன செய்வதற்காக இரு குடும்பங்களுக்கு 10 மில்லியன் (ஒரு கோடி) ரூபா நேற்று கையளிக்கப்பட்டது.
அத்துடன், இரு குடும்பங்களுக்கு முதற்கட்டத் தவணையாக 20 லட்சம் ரூபாவும், மேலும் இரு குடும்பங்களுக்கு இரண்டாம் கட்டத் தவணையாக 15 லட்சம் ரூபாவும் வழங்கப்பட்டது.
பகுதியளவில் சேதமடைந்த வீடுகளைப் புனரமைப்பதற்காக 24 குடும்பங்களுக்குத் தலா 2 லட்சம் ரூபா வீதம் நேற்று வழங்கப்பட்டதுடன், உத்தியோகபூர்வ மதிப்பீடுகளின்றி, அதிகாரிகளின் உறுதிப்படுத்தலின் அடிப்படையில் 5 லட்சம் ரூபா வரை நிதியுதவி பெறுவதற்கு 205 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளன. அவர்களின் முதற்கட்ட நடவடிக்கையாக 3 லட்சம் ரூபா நிதி நேற்று கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும், முறையான மதிப்பீடுகளின் அடிப்படையில் இழப்பீடு பெறும் 13 வீடுகளுக்கான காசோலைகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
பாதிப்புகளுக்குள்ளான மக்களின் இயல்பு வாழ்க்கையையும் உள்கட்டமைப்பு வசதிகளையும் பழைய நிலைக்குக் கொண்டுவருவதுடன், அதைவிடவும் வலுவான முறையில் மீண்டும் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும்.
இந்நிகழ்வில் பதுளை மேயர் நந்தன ஹப்புகொட, பிரதி மேயர், பதுளை பிரதேச சபையின் தவிசாளர் பாலித ஜயவர்தன, உப தவிசாளர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், பதுளை மேலதிக மாவட்ட செயலாளர், பதுளை பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும், பெருந்திரளான பயனாளிகளும் கலந்துகொண்டனர்.










