மலையகத்தில் புதிய கட்சியாக மலையக சிறுத்தைகள் உதயம்

“ மலையக அரசியல் வரலாற்றில் ஒரு ரூபா கூட வெளியாட்களிடமிருந்து நிதியுதவியாகப் பெறாமல், எந்தவொரு பிரபல அரசியல்வாதியின் அரசியல் பின்புலத்தையும் சார்ந்திருக்காமல், முழுக்க முழுக்க மலையக இளைஞர்களின் தன்னார்வ முயற்சியால் மலையகத்திற்கான தனித்துவமான அரசியல் பாதையொன்றை உருவாக்கியிருப்பதை நினைத்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்” என மலையக சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அருண் வெங்கடேஷ் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு ,

“ஐந்து தசாப்தங்களுக்கும் மேலான மலையக அரசியல் வரலாற்றில் பல்வேறு அரசியல் கட்சிகள் உருவாகியுள்ளன. அவற்றில் பல காலப்போக்கில் காணாமல் போயுள்ள நிலையில், ஓரிரு கட்சிகள் மாத்திரமே தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றன.
ஆனால், மலையக இளைஞர்களால் முற்றுமுழுதாக சுயாதீனமாக உருவாக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற அடையாளத்தை இதுவரை எவரும் உருவாக்கவில்லை என்பதே எமது பார்வை.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தாய் கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் அல்லது வெளியேற்றப்பட்டவர்கள், தனிப்பட்ட அரசியல் முரண்பாடுகளின் பின்னணியில் புதிய கட்சிகளை உருவாக்கிய வரலாறுகளையே நாம் அதிகமாகக் காண்கிறோம்.

அதேபோன்று, வெளிநாடுகளில் வாழும் மலையக சமூக ஆர்வலர்களிடம் தமது அரசியல் செயற்பாடுகளை முன்வைத்து நிதியுதவிகளைப் பெற்றுக்கொள்ளும் நடைமுறைகளும் கடந்த காலங்களில் காணப்பட்டுள்ளன.

மலையகத்திற்கு தனித்துவமான அரசியல் கட்சி ஒன்று அவசியம் என்ற கருத்து நீண்ட காலமாகவே பல்வேறு தரப்பினராலும் பேசப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், அந்தக் கருத்தை நடைமுறையில் கொண்டு வந்து, எந்தவித அரசியல் பின்புலத்தையும் சாராமல் புதிய பாதையை உருவாக்குவதற்கு எவரும் முன்வராதது எமக்கு வருத்தமளித்த விடயமாகும்.

இன்றைய இளைஞர்கள் சமூக வலைத்தள மோகத்தில் சிக்கி, ஆரோக்கியமான சமூக விடயங்களுக்கு முன்னுரிமை வழங்குவதில்லை என்றும், மலையகத்தின் எதிர்கால மாற்றம் தொடர்பில் அடிப்படை அரசியல் சிந்தனையற்றவர்களாக இருக்கின்றனர் என்றும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.அந்தப் பார்வையை மாற்றியமைக்க வேண்டும் என்பதே எமது நோக்கம்.

சமூக வலைத்தளங்களை வெறுமனே பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தாமல், அவற்றின் ஊடாக நீண்டகாலமாக அறிவார்ந்த சமூக மற்றும் அரசியல் கருத்துக்களை முன்வைத்து வந்த மலையக இளைஞர்களை ஒன்றிணைத்து, அவர்களின் சிந்தனைகளுக்கு ஒரு அரசியல் வடிவம் கொடுக்கும் முயற்சியாகவே மலையக சிறுத்தைகள் கட்சி – மசிக உருவாகியுள்ளது.

இன்று மசிக, மாகாண மற்றும் மாவட்ட ரீதியிலான இணைப்பாளர் கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளதுடன், கட்சியின் மேல்மட்ட நிர்வாக கட்டமைப்பில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பணிகளை நிறைவு செய்துள்ளது.

அதேவேளை, அனைத்து முக்கியமான சமூக ஊடக தளங்களிலும் கட்சியின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தி முன்னெடுத்து வருகின்றோம்.
எல்லாவற்றையும் விட முக்கியமான விடயமாக, மசிக ஒரு தெளிவான அரசியல் நிலைப்பாட்டையும் அறிவித்துள்ளது.

அதாவது, வெளிநாடுகளில் இருந்து எந்தவொரு நன்கொடையையோ அல்லது நிதியுதவியையையோ கட்சிக்கோ அல்லது கட்சியுடன் தொடர்புடைய தனிநபர்களுக்கோ பெற்றுக்கொள்வதில்லை என்பதே எமது உறுதியான நிலைப்பாடு.

மலையகத்தின் உண்மையான மாற்றத்தை விரும்புகின்ற எந்தவொரு நபரும் எங்களுடன் இணைந்து சுதந்திரமாகவும், தனித்துவமாகவும் அரசியல் செய்ய முடியும். அவர்களுடைய சிந்தனைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் எமது கட்சிக்குள் உரிய இடம் இருக்கும்.

மலையக அரசியலில் இதுவரை காணப்படாத ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என்பதே எமது இலக்கு. தனிநபர் வழிபாடு, அரசியல் குடும்ப ஆதிக்கம், வெளிப்புற நிதிச் சார்பு ஆகியவற்றைத் தாண்டி, மக்களையும் குறிப்பாக இளைஞர்களையும் மையமாகக் கொண்ட அரசியலை கட்டியெழுப்ப விரும்புகிறோம்.

அதன் அடிப்படையில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மலையகத்தின் அனைத்து பகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் இலக்குடன் மசிக தயாராகி வருகின்றது.

மலையக மக்களுக்கான அரசியலை மலையக மக்களே உருவாக்க வேண்டும். அந்த அரசியல் பயணத்தின் ஒரு புதிய அத்தியாயமாகவே மலையக சிறுத்தைகள் கட்சியை நாம் பார்க்கின்றோம்” என அருண் வெங்கடேஷ் மேலும் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles