ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பகுதியை (West Bank) இரண்டாகப் பிரிக்கும் வகையில், ‘E1’ குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 1,200 க்கும் மேற்பட்ட புதிய வீடுகளைக் கட்டுவதற்கான நடவடிக்கையை இஸ்ரேல் ஆரம்பித்துள்ளது.
சட்டவிரோதமான இந்த நகர்வுக்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பும் கண்டனமும் கிளம்பியுள்ளது.
பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, கனடா மற்றும் நார்வே ஆகிய நாடுகள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில்,
இஸ்ரேலின் இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், பாலஸ்தீனப் பகுதிகளின் நிலத்தொடர்ச்சியை (Territorial Contiguity) இது கடுமையாகப் பாதிக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளன.
மேலும், இத்திட்டத்தில் பங்கேற்பவர்கள் சட்ட ரீதியிலான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்த அந்த நாடுகள், இத்திட்டங்களை உடனடியாகக் கைவிட்டு மேற்குக் கரையில் குடியிருப்புகள் விரிவாக்கத்தை நிறுத்துமாறு இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளன.
இதேபோல் எகிப்து வெளியுறவு அமைச்சகம், மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் சார்பில் இத்திட்டத்திற்குப் பலத்த கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பாலஸ்தீனியர்கள் தங்கள் எதிர்காலத் தலைநகராகக் கருதும் கிழக்கு ஜெருசலேமுடனான தொடர்பை இத்திட்டம் முற்றிலுமாகத் துண்டித்துவிடும் என ஐ.நா அச்சம் வெளியிட்டுள்ளது.
