நாடாளுமன்றில் முன்வைத்துள்ள, அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம் மக்கள் இறைமையுடன் தொடர்புபட்ட விடயம் என்பதால், அதனை சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்த வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது.
கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் குறித்து விரிவாக ஆராயப்பட்டதை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மக்களின் இறைமை, அரசியலமைப்பு ஏற்பாடுகள் மற்றும் நாட்டின் ஜனநாயக கட்டமைப்புடன் நேரடியாக தொடர்புபட்ட விடயங்களில், மக்களின் நேரடி கருத்தை அறிந்து கொள்வது அவசியம் என தமிழ் அரசுக் கட்சி கருதுகிறது.
அந்த வகையில், 22வது திருத்தச்சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதுடன் மட்டுப்படுத்தாமல், மக்களின் நேரடி அங்கீகாரத்தைப் பெறுவதற்காக பொதுவாக்கெடுப்புக்கு முன்வைக்க வேண்டும் என கட்சியின் அரசியல் குழு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, அரசாங்கத்துக்கும் ஏனைய அரசியல் தரப்புகளுக்கும் கட்சி அறிவிக்கவுள்ளதாக தமிழ் அரசுக் கட்சி தெரிவித்துள்ளது.










