இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் எரிக் மேயர் இந்த வாரம் கொழும்பு வந்து தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
அமெரிக்கத் தூதுவராக இருந்த ஜூலி சங் பணியை முடித்து திரும்பிய பின்னர் புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட எரிக் மேயர் கடந்த 13ஆம் திகதி இலங்கைக்கான தூதுவராக வொசிங்டனில் கடமைகளை பொறுப்கேற்றிருந்தார்.
அவர் இலங்கைக்குப் புறப்பட முன்னர் கடந்த 20ஆம் திகதி
அமெரிக்காவிற்கானஇலங்கைதூ தரகத்துக்குச் சென்று, பதில் தூதுவர் மதுக விக்ரமாராச்சியைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நீண்டகால மற்றும் பன்முக உறவு குறித்தும், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான முன்னுரிமைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அண்மைய முன்னேற்றங்கள் குறித்தும், அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, மற்றும் கல்வி தொடர்பான துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான சிறிலங்கா தூதரகத்தின் முயற்சிகள் குறித்தும், மதுக விக்கிரமாராச்சி, எரிக் மேயருக்கு விபரித்திருந்தார்.
இதையடுத்து, எரிக் மேயர் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த சிறிலங்கா அரசாங்கத்துடன் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பணியகத்தின் பிரதிப் பணிப்பாளர் சாரா ஆல்ட்ரிச் மற்றும் சிறிலங்கா தூதரகத்தின் தூதரக அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதையடுத்து இந்த வாரம் கொழும்பு வரவுள்ள எரிக் மேயர், அமெரிக்க தூதரகத்தில் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சீனத் தூதுவர் வெய் ஹூவாசியாங், அமெரிக்க தூதுவர் எரிக் மேயர் உள்ளிட்ட 12 நாடுகளின் தூதுவர்கள் அடுத்த வாரம் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவிடம் தமது நியமன கடிதங்களை கையளிக்கவுள்ளனர்.
