நேபாளம் மற்றும் சீனா கட்டுப்பாட்டில் உள்ள திபெத் எல்லைப் பகுதியில், இமயமலை ஆற்றில் ஏற்பட்ட பிரம்மாண்ட பாறை மற்றும் சேறு சரிவு காரணமாக உருவான பேரழிவு வெள்ளத்தில் 390-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் 1,500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வியாழக்கிழமை அன்று மீட்புக் குழுவினர் சேற்றில் இறங்கித் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
நேபாளத்தில் மட்டும் குறைந்தபட்சம் 392 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்டை பிராந்தியமான திபெத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனப் பிரதமர் லி சியாங், பேரழிவு நடந்த மறுநாளான வியாழக்கிழமை பிற்பகல் திபெத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தைப் பார்வையிட்டு, “அவசரகால மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை” நேரில் வழிகாட்டினார் என அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேபாள சுற்றுலாத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட தகவலின்படி, 34 நாடுகளைச் சேர்ந்த 668 சுற்றுலாப் பயணிகள் புதன்கிழமை காலை முதல் தொடர்பில் இல்லை என்றும், அவர்களில் பெரும்பாலோர் மலையேற்றப் பயணங்களில் (Trekking) ஈடுபட்டிருந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களில் குறைந்தது 177 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், 90 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள், 34 பேர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள், 33 பேர் பிரித்தானியாவை சேர்ந்தவர்கள் மற்றும் 25 பேர் கனடாவைச் சேர்ந்தவர்கள்.
நேபாளத்தில் காணாமல் போனவர்களில் 100 சீனக் குடிமக்களும் அடங்குவர் என்று பெய்ஜிங் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கை உதவி
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாகப் பல உயிரிழப்புகளும், மக்கள் இடம்பெயர்வுகளும், பெருமளவிலான அழிவுகளும் ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டிற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் அவசரகால நிவாரண நிதியுதவி வழங்க இலங்கை தீர்மானித்துள்ளது.
நேபாளத்தின் தற்போதைய நிவாரண மற்றும் மீட்புப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், இந்த நிதியுதவியை வழங்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த பேரிடரால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் துயரங்கள் குறித்து தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள ஜனாதிபதி திசாநாயக்க, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பில், குறிப்பாக அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்குத் தனது அனுதாபத்தைப் பகிர்ந்து கொண்டார்.
அத்துடன், இலங்கை மற்றும் நேபாளத்திற்கு இடையிலான நீண்டகால நட்புறவைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் மனிதநேய உதவிகளை வழங்குவதையே இந்த உதவி நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.
