எல்நினோ தாக்கம்: அனர்த்த முன்னெச்சரிக்கை செயலமர்வுகளை நடத்த தீர்மானம்

 

எல்-நினோ காலநிலை தாக்கத்திற்கு முகங்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தியின் தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழுவு மற்றும் அதிகாரிகள் குழு, ஐந்தாவது தடவையாகவும் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (14) பிற்பகல் ஒன்றுகூடியது.

எல்-நினோ காலநிலைத் தாக்கமானது வறட்சியான நிலையிலிருந்து எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் மழையுடன் கூடிய காலநிலைக்கு மாறவுள்ளதால், அதற்கு எவ்வாறு முகங்கொடுக்க வேண்டும் என்பது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மழையினால் ஏற்படக்கூடிய வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்ளும் வகையில் பொதுமக்களை விழிப்புணர்வூட்டுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டதுடன், அத்தகைய அனர்த்த நிலைமைகளின்போது பொதுமக்கள் எவ்வாறு முகங்கொடுக்க வேண்டும் என்பது தொடர்பான அனர்த்த முன்னெச்சரிக்கை செயலமர்வுகளை நடத்துவதற்கும் குழு கவனம் செலுத்தியது.

மண்சரிவு அபாயத்தை எதிர்கொள்ளும் கண்டி, பதுளை, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களை மையமாகக் கொண்டு அதற்குரிய ஆரம்ப முன்னெச்சரிக்கை செயலமர்வுகளை நடத்துவதற்கும், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு இதன் போது அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் ஊடாக மக்களை விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் செயற்பாட்டு அறைகளை செயற்படுத்துவதன் மூலம் மக்களை முற்கூட்டியே தயார்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், எல் நினோ காலநிலைமையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக முன்னெடுக்கப்படும் நிவாரணப் பணிகள் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன் போது மீளாய்வு செய்யப்பட்டது.

வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, விசேட அமைச்சரவை உபகுழுவின் செயலாளர்/அழைப்பாளர், அதிகாரிகள் குழுவின் தலைவர்/ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டீ.பீ. விக்ரமசிங்க, வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.எல்.கே. விஜேமான்னகே, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி காமினி ஜெயதிஸ்ஸ, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் டீ. பாரதிதாசன் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

Related Articles

Latest Articles