மன்னார் பொது மருத்துவமனையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு நிர்மாணப் பணி ஆரம்பம்
மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (16) முற்பகல் ஆரம்பிக்கப்பட்டன.
மன்னார் மக்களின் சுகாதார வசதிகளை மேலும் விரிவுபடுத்துவதற்காக, இந்திய அரசின் நிதியுதவியுடன் 600 மில்லியன் ரூபாய் செலவில் அனைத்து நவீன வசதிகளையும் கொண்டதாக இந்தப் பிரிவு நிர்மாணிக்கப்பட உள்ளது.
நிர்மாணப்ணியானது 2028 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் நிறைவு செய்யப்படவுள்ளது.
இத்திட்டம் நிறைவடைந்ததும், மன்னார் மக்கள் கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களுக்குச் செல்லாமல் அவசர விபத்துகள் மற்றும் ஏனைய நிபுணத்துவ சுகாதார சேவைகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வசதி ஏற்படுத்தப்படும்.
இதனுடன் இணைந்ததாக, மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்குத் தேவையான வைத்திய உபகரணங்கள் மற்றும் ஊழியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவசர சிகிச்சைப் பிரிவின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, வைத்தியசாலை ஊழியர்களுடன் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிடுகையில், ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் கடந்த இரு வருடங்களில் சுகாதாரத் துறையில் 600 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மன்னார் மறை மாவட்ட ஆயர் ஞானப்பிரகாசம் அந்தோனிப்பிள்ளை அடிகளார் , வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா மற்றும் பாதுகாப்புப் படைப் பிரதானிகள், சுகாதார அமைச்சின் அதிகாரிகள், இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், யாழ்ப்பாண இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி உள்ளிட்ட பல அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.










