நாடு தற்போது ஒரு தீர்க்கமான திருப்புமுனையை எதிர்நோக்கியுள்ளது. சர்வாதிகாரப் போாக்குடன் ஒரு கட்சி, முழு அதிகாரத்தையும் கையில் எடுத்து, தனிக் கட்சி ஆட்சியை நிறுவ முயற்சித்து வருகின்றது.
ஜனநாயகத்தை வெளிப்படையாகவே மீறும் செயல்களை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் செய்து வருகின்றது. இத்தகைய சூழ்நிலையில், ஒரு நேர்மையான, பயன்களைப் பெற்றுத் தரும் எதிர்காலத்திற்காக ஒன்றாய் இணைகிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
‘ஜே.ஆரின் அரசாளுகையும் நடுத்தர பாதையும்’ எனும் கருப்பொருளின் கீழ் ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்த டி.எஸ். சேனநாயக்க அரசியல் பீடத்தின் பழைய மாணவர் சங்கத்தால் முதன்முறையாக ஏற்பாடு செய்த கருத்தாடல் நிகழ்வு இன்று (17) மாலை தேசிய நூலக மற்றும் ஆவண சேவைகள் சபைக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட, அரசியல் பிரமுகர்கள், பேராசிரியர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
” நாட்டில் பல்வேறு காலங்களில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் சூதாட்டங்களை மீண்டும் செயற்படுத்துவதற்கான இணைவாக இந்த இணைவு அமையாது. பதவிகளை பகிர்ந்து கொள்ள, அரசியல் சலுகைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட அருவருப்பான, கீழ்த்தரமான அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைகின்றன. மக்கள் சார்பான முற்போக்கான கொள்கைச் சட்டகத்தின் ஊடாக இந்த இணைவானது நிகழும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாட்டில் தற்சமயம் சர்வாதிகார வேட்கையுடன் செயற்படும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவந்து முற்றிலுமாகப் பரிதவித்துப்போயுள்ள 220 இலட்சம் மக்கள் நாட்டுக்கு ஒரு மாற்றீட்டைத் தேடிக்கொண்டிருக்கின்றனர்.
எனவே இந்தச் சந்தர்ப்பத்தில் ஜே.ஆர். ஜயவர்தனவின் நடுத்தர பாதையையே நாமும் பின்பற்றுகிறோம். நாட்டுக்குரிய ஒரே எதிர்காலப் பயணம் வலதுசாரியோ இடதுசாரியோ அல்ல, மாறாக நடுத்தரப்பாதையில் அமைந்த பயணமே என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
இன்று நாட்டில் 30-40 சதவீதமானோர் வறுமைக்கோட்டில் வாழ்கின்றனர். நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களின் தொழில் முயற்சியாண்மைகள் வீழ்ச்சியடைந்துள்ள இக்கட்டத்தில் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணையும்.
சரியான வேலைத்திட்டத்துடன் சரியான பாதையில் பயணிக்க வேண்டும். 220 இலட்சம் மக்களின் பொது எதிரியான தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றாய் அணிதிரள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.










