இலங்கைப் பொருளாதாரம் தற்போது ஸ்திரத்தன்மைக்கான பாதைக்கு வந்துள்ளமை அண்மைய பல பொருளாதார அளவுகோள்களினால் தெளிவாகியுள்ளதாகவும், அந்த ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் நாட்டை மாற்றத்திற்குரிய ஒரு யுகத்தை நோக்கி கொண்டு செல்வதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
அதேபோல், நாடு அடைந்துள்ள இந்த பொருளாதார வெற்றிகளை மக்களின் வாழ்க்கைத் தரத்தை இலகுபடுத்துவதற்கும் உயர்த்துவதற்கும் பயன்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்காகும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாட்டு பிரதானி எவன் பபகோர்ஜியோ (Evan Papageorgiou) உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.
இந்தப் பிரதிநிதிகள் குழுவானது, இலங்கையின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி (EFF) வேலைத்திட்டத்தின் ஏழாவது மீளாய்வு மற்றும் 2026 IV பிரிவுக்குட்பட்டு ஆலோசனை வழங்குவதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளதோடு, அவர்கள் செப்டம்பர் 10 முதல் 23 வரை கொழும்பில் தங்கியிருப்பர்.
இலங்கை தற்போது அடைந்துள்ள சிறப்பான பொருளாதார முன்னேற்றம் தொடர்பில் எவன் பபகோர்ஜியோ பாராட்டுத் தெரிவித்ததோடு, விசேடமாக அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்ளுதல், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துக் கொள்ளுதல் உள்ளிட்ட நிதி ஒழுங்கைப் பேணுவதற்காக கடந்த காலங்களில் இலங்கை பின்பற்றிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
எட்டியுள்ள இந்த பொருளாதார ஸ்திரத்தன்மையை தொடர்ந்தும் பேணிப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதில் அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையே நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் ஒரு முக்கியமான அடித்தளத்தை வழங்கியதாக மேலும் தெரிவித்தார்.
அண்மையில் இலங்கை முகம்கொடுத்த பாரிய இயற்கை அனர்த்தமான ‘டித்வா’ அனர்த்த நிலைமைக்கும், மத்திய கிழக்கில் ஏற்பட்ட யுத்த நிலைமை காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட தாக்கத்திற்கும் பலமாக முகம்கொடுப்பதற்கு அந்த பொருளாதார ஸ்திரத்தன்மை முக்கிய காரணியாக அமைந்ததாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அதேபோல், நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதத்தை 4.2% மட்டத்தில் பேணிக் கொள்ள முடிந்துள்ளமையும், பொருளாதாரம் வழமைக்குத் திரும்பி வருகின்றமைக்கான முக்கியமான சமிக்ஞையாகும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டதுடன், கடந்த இரு வருடங்களாக அரசாங்கம் வரி வருமானங்களைச் சேகரிப்பதில் காட்டிய செயற்திறனையும் இதன்போது நினைவுகூர்ந்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் முக்கியமான காரணியாக விளங்கும் சமூக நலன்புரி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக எரிசக்தி செலவுகள் தொடர்பில் மக்கள் முகம்கொடுக்க நேர்ந்துள்ள சிரமங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரசல் அபொன்சு உள்ளிட்ட பலரும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.










