‘நுண்கடன் நிதியை மலையக பெண்கள் வீணாக செலவு செய்கின்றனர்’

மலையக பெண்கள் நுண் கடன் மூலம் பெற்றுக் கொள்கின்ற பணத்தை தங்களுடைய பிள்ளைகளின் திருமண நிகழ்விற்கும் பூப்புனித நீராட்டுவிழாவிற்கும் பிறந்த நாள் விழாவிற்கும் ஆலய திருவிழாவிற்குமாகவே அதிகமாக செலவு செய்திருக்கின்றார்கள். இதன் மூலம் எங்களுடைய மலையக பெண்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக மாறியிருக்கின்றார்கள் என சிரேஸ்ட விரிவுரையாளரும் மனித உரிமை மற்றும் பால்நிலை செயற்பாட்டாளருமான திருமதி சோபனா ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் நடைபெற்ற மலையக மக்கள் முன்னணியின் சர்வதேச மகளிர் தின (14.03.2021) நிகழ்வில் பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

இன்று இலங்கையில் அனைத்து மாவட்டங்களையும் பெண்களை ஆட்டிப்படைக்கின்ற ஒரு விடயமாக மாறியிருப்பது நுன் நிதிக் கடன் என்ற ஒரு விடயம். இதற்காக 26 வீதம் 32 வீதம் 36 வீதம் என வட்டிகள் அறவிடப்படுகின்றது.இந்த கடன் தொகையை மீள செலுத்த முடியாமல் பல சமூக பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.இது மிகவும் கவலைக்குறிய ஒரு விடயமாகும்.

இது ஒரு பாரிய பிரச்சினையாக மாறிவருகின்ற காரணத்தால் இதனை எவ்வாறு மலையக பெண்களிடம் இருந்து வெளியே கொண்டு வருவது என்பது தொடர்பாக மலையகத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற தொழிற்சங்கங்கள் சமூக அமைப்புகள் ஏனைய மலையக மக்கள் தொடர்பாக செயற்படுகின்ற அமைப்புகளும் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றேன்.

இன்று மலையகத்தில் இளவயதில் முறையற்ற கர்ப்பம் தரித்தல் குடும்ப வன்முறை பெண் தற்கொலை என்பன குறிப்பிடக்கூடிய அளவில் அதிகரித்திருப்பதை புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான காரணங்களை ஆராய வேண்டிய ஒரு நிலையிலும் அதற்கான தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டிய நிலையிலும் இன்று மலையக பெண்கள் இருக்கின்றார்கள்.இதற்கான தீர்வை ஏனையவர்களிடம் இருந்து எதிர்பார்ப்பதைவிட எங்கள் மூலமாக இதனை செய்வதற்கு மலையக பெண்கள் தயாராக வேண்டும்.

மலையக பெண்களை பொறுத்த அளவில் ஏனைய சமூகங்களை போல கல்வி சுகாதார பொருளாதார வசதிகள் குறைந்தவர்களாகவே இருக்கின்றோம்.இதுவும் இன்று மலையக பெண்களுக்கு உள்ள ஒரு பாரிய சவாலாக அமைந்துள்ளது.

இன்று பல குடும்பங்களில் பெண் பிள்ளைகளை கண்டிப்பாக வளர்க்க வேண்டும் என்ற ஒரு நிலையில் பெற்றோர்கள் இருக்கின்றார்கள்.இதனை நான் ஒரு பெண் செயற்பாட்டாளனாக இருந்து கொண்டு பார்க்கின்ற பொழுது முழுமையாக எதிர்க்கின்றேன்.

ஏனென்றால் பிள்ளைகள் என்பவர்கள் அது ஆனாக இருந்தாலும் பெண்;ணாக இருந்தாலும் சமனாக பார்க்க வேண்டும் என்பதே என்னுடைய கருத்தாகும் ஏனெனில் குடும்ப நிலையில் இருந்தே ஆண் பெண் சமத்துவத்தை உருவாக்க வேண்டும்.அப்படி உருவாக்குகின்ற பொழுதுதான் அவர்கள் பெரியவர்களாக வளர்ந்து வருகின்ற பொழுது அந்த சமத்துவத்துடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படும்.

இன்று 109 வது பெண்கள் சர்வதேச தினத்தை நாம் கொண்டாடுகின்றோம்.ஆனால் ஏன் இந்த தினத்தை கொண்டாடுகின்றோம்.இதற்காக அர்ப்பணிப்பு செய்த பெண்கள் யார்?அவர்கள் செய்த அர்ப்பணிப்பு என்ன என்பதையும் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏனெனில் ஒரு விழாவை அல்லது ஒரு தினத்தை கொண்டாடுகின்ற பொழுது அந்த தினம் எதற்காக கொண்டாடப்படுகின்றது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.எனவே மலையக பெண்கள் எதனையும் சாதிக்கக் கூடிய திறமை இருக்கின்றது.

மலையக பெண்கள் இன்றும் பல சாதனைகளை செய்து கொண்டிருக்கின்றார்கள்.அவர்களை இனம் கண்டு அடுத்தடுத்த பெண்கள் தினத்தில் அவர்களையும் கௌரவப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.அப்படி செய்தால் எதிர்காலத்தில் இன்னும் எங்களுடைய மலையக பெண்கள் சாதனைகளை செய்வார்கள்.” – என்றார்.

Related Articles

Latest Articles