உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தனது கையடக்கத் தொலைபேசி மற்றும் கணினி என்பவற்றின் கடவுச்சொற்களை (Passwords) விசாரணை நோக்கங்களுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) வழங்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், கடந்த நீதிமன்றத் தவணையின் போது பிரதிவாதிகள் தரப்பால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மீதான உத்தரவுகளையும் நீதவான் இன்று பிறப்பித்தார்.
அதன்படி, பிரதிவாதிகள் தரப்பால் முன்வைக்கப்பட்ட முதலாவது கோரிக்கையான, இந்த விசாரணையில் இருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தற்போதைய பணிப்பாள நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதவான் நிராகரித்தார்.
இரண்டாவது கோரிக்கையான, காவலில் உள்ள சந்தேக நபரான சுரேஷ் சலேக்கு சட்டக் கடமைகளுக்குத் தேவையான செய்தித்தாள்கள், எழுதப்பட்ட ஆவணங்கள் மற்றும் சட்டக் கோவை புத்தகங்களை வழங்குவதற்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தையும் நீதவான் நிராகரித்தார்.
மேலும், குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவையின் 127ஆம் பிரிவின் கீழ், சந்தேக நபர் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அல்லாத (Statement which would not amount to a confession) பொதுவானதொரு அறிக்கையை நீதவான் முன்னிலையில் வழங்குவதற்கு அனுமதிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையையும் நீதவான் நிராகரித்தார்.
இவ்வாறான அறிக்கை தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு இடையூறை ஏற்படுத்தலாம் என நீதவான் இதன்போது சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் முதலாவது மற்றும் இரண்டாவது சந்தேக நபர்களுக்கு எதிராக மேலும் சான்றுகள் இல்லை என்ற அடிப்படையில், அவர்களை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தையும் நீதவான் நிராகரித்தார்.
எனினும், மூன்றாவது சந்தேக நபரான சுரேஷ் சலே தொடர்பான கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், அவரை நீதிமன்றத்தில் நேரில் முன்னிலைப்படுத்தத் தேவையில்லை என்ற கோரிக்கைக்கு அனுமதி வழங்கியதுடன், எதிர்கால நீதிமன்றத் தவணைகளின் போது காணொளித் தொழில்நுட்பம் (Video Technology) ஊடாக அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டார்.
அதேநேரம், மூன்றாவது சந்தேக நபரைச் சட்டத்தரணிகள் அணுகுவது தொடர்பான விடயத்தில் நீதிமன்றக் கண்காணிப்பை (Judicial Supervision) கோரிய விண்ணப்பத்தையும் நீதவான் நிராகரித்தார்.
இந்த வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில், வழக்கின் முதலாவது முறைப்பாட்டாளர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியின் கோரிக்கை மீதான உத்தரவும் பிறப்பிக்கப்படும் என நீதவான் தெரிவித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் முன்னிலையான இராணுவ அதிகாரி அஜித் சாந்த குமார ஜயதிலக்க, சட்டத்தரணி ஒருவரின் உதவி இன்றி நீதிமன்றத்தில் தனிப்பட்ட ரீதியில் சமர்ப்பணங்களைச் செய்வதற்கு அனுமதி கோரி சமர்ப்பித்த விண்ணப்பம் மீதான உத்தரவும் செப்டம்பர் 2ஆம் திகதி வழங்கப்படும் என நீதவான் மேலும் தெரிவித்தார்.










