புகழ் பூத்த தமிழ்க் கவிஞர் நீலா பாலன் தமது 73 அகவையில், (இன்று) 05.04.2021 மாரடைப்புக் காரணமாக, பதுளை அரசினர் மருத்துவமனையில் இயற்கை எய்தினார்.
பதுளையைச் சேர்ந்த வெலிமடையில் நீண்டகாலமாக வாழ்ந்து வந்த இவர், முழு இலங்கையிலும் போற்றப்படக்கூடிய நீலா பாலனின் இயற்பெயர் பூபாலரட்ணமாகும்.
இவர் 14.04.1948ல் நல்லதம்பி, பூரணிப்பிள்ளை ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் கவிதை இலக்கணத்தை சிறு வயதிலிருந்தே முறைப்படி கற்றுக்கொண்டு இறக்கும் வரையில், வெல்லும் கவிஞராகவே விளங்கி வந்ததற்கான காரணம், அவரது அடிப்படை இலக்கிய ஞானமாகும். இது வரையில், அவர் 700ற்கு மேற்பட்ட கவிதையை எழுதியுள்ளார்.
அத்துடன், 15 நாடகங்களை மேடையேற்றியுள்ளார். 75 கவியரங்குகளுக்கு தலைமை வகித்துள்ளார். “தமிலோசை” என்ற கையெழுத்து பிரதிக்கும் ஆசிரியராக இருந்து வந்துள்ளார்.
முத்தமிழ் மன்றத்தின் தலைவராகவும் இருந்த அவர் ‘இலந்தை பழத்துப் புழுக்கள்’, ‘கடலோர தென்னை மரம்’ என்ற நாடகங்களை மேடையேற்றி, பெரும் வரவேற்பை பெற்றவராவார்.
நான்கு தசாப்தங்களாக கவிதை மன்னராக இருந்து வந்த இவர், பாவரவு, கவிதை வித்தகர், கவிமணி, தமிழ் மணி, கவிமாமணி, கவிதை பரிதி ஆகிய பட்டங்களைப் பெற்ற இவர், இலங்கை அரசினால் ‘கலாபூஷணம்’ என்ற அரச விருதையும் பெற்றிருக்கின்றார்.
அவரது இறுதிக்கிரியைகள் 06.04.2021 மாலை 3.00 மணியளவில் வெளிமடை பொது மயானத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இறுதியாக, இவர் பெருந்தோட்ட மக்களுக்கு சேவையாற்றும் பொருட்டு பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமாரினால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்கத்திலும் தொழிலுறவு அதிகாரியாக கடமையாற்றியவர் என்பதும் இங்கு விசேடமாக குறிப்பிடத்தக்கதாகும்.
எம். செல்வராஜா, பதுளை










