” கொவிட் – 19 தடுப்பூசிகள் தொடர்பில் பரவும் வதந்திகளை நம்பவேண்டாம். அனைவருக்கும் இலவசமாகவே தடுப்பூசி ஏற்றப்படும். எவராவது பணம் கோரி அழுத்தம் கொடுத்தால் அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கவும்.” – என்று ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன நேற்று கோரிக்கை விடுத்தார்.
தடுப்பூசி விவகாரம் தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் – பை தடுப்பூசியின் முதலாவது டோஸை மட்டும் பெற்றுக்கொள்வது திருப்தியளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், அது தொடர்பான பரிசோதனை அறிக்கைகள் உள்ளதாகவும் ஸ்புட்னிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தடுப்பூசி நிறுவனத்தால் எமக்கும் சில தகவல்கள் தெரியப்படுத்தப்பட்டுள்ளன.
முழுமையான தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உற்பத்தி நிறுவனம் மற்றும் அந்நாட்டு விஞ்ஞானிகளால் அறிவிக்கப்பட்ட பின்னர், முதலாவது டோஸை மட்டும் ஏற்றினால் போதுமா என்பது தொடர்பில் எம்மால் தீர்மானம் எடுக்கப்படும். ஆனால் தற்போது அவ்வாறானதொரு முடிவு எடுக்கப்படவில்லை.
அத்துடன், தடுப்பூசி தொடர்பில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். உங்களுக்கான தடுப்பூசி இலவசமாக ஏற்றப்படும். தடுப்பூசி ஏற்றுவதற்கோ, வரிசையில் நிற்பதற்கோ எவருக்கும் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. அவ்வாறு எவராவது பணம் கோரினால் பொலிஸாருக்கு அறிவிக்கவும்.” – என்றார்.
