கண்டி, கெலிஓயா – பூவெலிகடவிலிருந்து வெலம்பொட பகுதிக்கு மிகவும் சூட்சுமமான முறையில் கழிவுத் தேயிலையை கடத்துவதற்கு முற்பட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ‘டொல்பின்’ வேனும், கழிவுத் தேயிலை 80 மூட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
வெலம்பொட பகுதியிலிருந்து லொறிகளில் கழிவுத்தேயிலை கடத்தப்பட்ட நிலையில் அவற்றை பொலிஸார் மடக்கிப்பிடித்து கடத்தலை முறியடித்த சம்பவங்கள் இதற்கு முன்னரும் பதிவாகின. எனவே, லொறியில் கடத்தினால்தான் சிக்கல் என எண்ணிய நபர்கள், இம்முறை கடத்தலுக்கு சொகுசு டொல்பின் வேனொன்றை பயன்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் வெலம்பொட பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது . கெலிஓயா, பூவெலிகட பகுதியில் இருந்து கழிவுத் தேயிலையை ஏற்றிவந்த டொல்பின் வேன், வெலம்பொடை பகுதியில் இவைத்து நேற்றிரவு மடக்கிப்பிடிக்கப்பட்டது.
கைதானவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இது தொடர்பில் மேலதிக பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

