சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு அசேல குணவர்தன பொருத்தமற்றவர். எனவே, அப்பதவியில் இருந்து அவர் உடன் விலக வேண்டும் – என்று மக்கள் உரிமையை பாதுகாக்கும் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க பிரமுகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே மேற்படி அமைப்பின் உறுப்பினர் பத்ம தேரர் இவ்வாறு வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய பொலிஸார், கூலிப்படைபோல் செயற்படுகின்றனர். நாட்டு மக்களை பயங்கரவாதிகளாகக்கருதி அவர்களை ஒடுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.இந்நிலைமை நீடித்தால் சர்வதேச மட்டத்தில் எமது நாடு அபகீர்த்திக்குள்ளாகும். இந்நிலைமைக்கு வழிசமைத்து கொடுப்பது யார்?
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் யாரின் தேவையை பூர்த்திசெய்கின்றார். அப்பதவிக்கு அவர் பொருத்தமற்றவர். எனவே, கௌரவமாக பதவி விலகுமாறு வலியுறுத்துகின்றோம்.” – என்றார்.
கொரோனா வைரஸ் பரவும் அபாயமிருப்பதால் போராட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தடைவிதித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், பணிப்புரையொன்றை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
