நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பில் உள்ள வீட்டில் பணிபுரிந்த 16 வயது சிறுமியொருவர் தீப்பிடித்து எரிந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த சிறுமி மீது எவ்வாறு தீப் பரவியது என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
தீப் பிடித்து எரிந்த நிலையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சிறுமியின் சகோதரனிடம் இதுகுறித்து கேட்டபோது, தங்கை கண்விழித்தால் மட்டுமே என்ன நடந்தது என்பது தெரியவரும் என கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
எனினும், 70 வீதம் வரை தீக்காயம் ஏற்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அவதியடைந்துவந்த சிறுமி நேற்றிரவு உயிரிழந்தார்.
எனினும், இந்த சிறுமி மீது எவ்வாறு தீப் பற்றியது, 70 வீதம் எரியும் வரை ஏன் சிறுமி காப்பாற்றப்படவில்லை என்ற கேள்விகள் தொடர்கின்றன.
இதேவேளை, 2004ஆம் ஆண்டு 11 ஆம் மாதம் 12ஆம் திகதி பிறந்த சிறுமி 2020ஆம் ஆண்டு 10 மாதம் ரிஷாட் பதியூதீன் எம்.பி.யின் வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.
நுவரெலியா, டயகம பிரதேசத்தைச் சேர்ந்த 6 சகோதரர்களைக் கொண்ட வறுமையான குடும்பத்தில் இருந்த இந்தச் சிறுமி வேலை முகவர் ஒருவர் ஊடாக ரிஷாட் பதியூதீன் எம்.பி. வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.
சிறுமி மீது திடீரென தீப்பற்றி எரிய என்ன காரணம் என்பது குறித்து பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.