மஸ்கெலியா நகரத்திற்கு சதொச விற்பனை நிலையமும், சமுர்த்தி வங்கியும் அவசியம்!

– தொ.தே.சங்கத்தின் மஸ்கெலியா இளைஞரணி அமைப்பாளர் ரொமேஸ் தர்மசீலன் வலியுறுத்து

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நகரங்களில் மிக முக்கிய நகரங்களாக அடையாளப்படுத்தும் நகரங்களாக நுவரெலியா, தலவாக்கலை, கொட்டகலை, ஹட்டன், நோர்வுட், பொகவந்தலா, மஸ்கெலியா, கினிகத்தேன மற்றும் இன்னும் சிறு நகரங்கள் ஏராளம் இருக்கின்றன . ஆனாலும் இந்த நகரங்களில் சமமான வசதிகள் இருக்கின்றதா என்பதை தேடிப்பார்த்தால் அது கேள்விக்குறிதான்.

விசேடமாக மஸ்கெலியா நகரை பொருத்த வரையில் சதொச, சமுர்த்தி வங்கி இவ்விரண்டும் தனியாக இல்லாதது மக்களுக்கு மிக முக்கிய பிரச்சினையாக இருக்கிறது.

கிட்டதட்ட 10 வட்டாரங்களில் 50 தோட்டங்களில் 60000 மக்கள் வாழும் மஸ்கெலியா பிரதேசம் சாமிமலை, லக்கம் மற்றும் நல்லதண்ணி ஆகிய மூன்று உப நகரங்களையும் உள்ளடக்கி இருக்கிறது.

இவ்வாறு 60000 பேர் வாழும் இந்த நகரத்தை அண்டிய மக்கள், சமுர்த்தி பயனாளிகள் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு நோர்வுட் சமுர்த்தி வங்கிக்கு கிட்டதட்ட 15KM பயணிக்க வேண்டியிருக்கிறது.

அதுவும் இந்த கொறோனா தொற்றினால் நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் மக்கள் பயணிக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது. ஆகவே, வங்கியுடனான நடவடிக்கைகள், அதிகாரிகளை தொடர்பு கொள்வதில் மக்கள் பெரும் சிரமங்களை சந்திக்க நேரிடுகின்றது.

மறே,ராஜமலை,எமில்டன், பெயார்லோன்,காட்மோர் ஆகிய பகுதிகளில் இருந்து கிட்டதட்ட 25KM வரை சமுர்த்தி வங்கிக்கு பயணிக்க வேண்டிய அவலம் இருக்கிறது.

சதொச விற்பனை நிலையம் ஒன்று இல்லாத காரணத்தினால் அத்தியாவசிய பொருட்களை நியாயமான விலையில் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமத்தை மக்கள் எதிர்நோக்க வேண்டியுள்ளது.

இது தொடர்பாக மஸ்கெலியா பிரதேச சபையின் பிரதேச சபை உறுப்பினர்கள், மஸ்கெலியா பிரதேச அரசியல் பிரமுகர்கள், சிவில் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் தொடர்ந்து கோரிக்கை மற்றும் அழுத்தம் கொடுத்து வந்துள்ள நிலையில் இதுவரையிலும் அரசாங்கத்தால் எந்தவிதமான நடவடிக்கைகளும் எட்டப்படவில்லை என்பது வருத்தமாகவே இருக்கிறது.

விசேடமாக மஸ்கெலியா பிரதேச சபையின் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்களான ராஜ் அசோக் மற்றும் ஆனந்தன் ஆகியோர் தொடர்ச்சியாக இது தொடர்பாக மாவட்ட ஆனையாளரிடம் வேண்டுகோள் விடுத்து வந்துள்ளதோடு ஊடகங்களிலும் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்கால நடைமுறையில் இதனை பேச்சுவார்த்தை நடத்தி பெற்றுக்கொடுக்க வேண்டிய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் மௌனம் கொண்டுள்ளது மக்களுக்கு பெரும் ஏமாற்றமாகும்.

ஆகவே, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் விரைவில் தீர்மானம் எடுத்து மக்களுக்கு சாதகமான தீர்வினை பெற்றுத்தருமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

Related Articles

Latest Articles