கண்டி இரஜவெல இந்து தேசிய கல்லூரிக்கு நவீனமயப்படுத்தப்பட்ட வினைத்திறன் விஞ்ஞான ஆய்வுகூட வசதிகள் மற்றும் விஞ்ஞான கல்லூரியாக தரம் உயர்த்த தீர்மானம்- பாரத் அருள்சாமி

அமைச்சர் ஜீவன் தொண்டமான் இரஜவெல இந்து தேசிய கல்லூரிக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதுதொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் மற்றும் பிரஜாசக்தி அபிவிருத்தி செயல்திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமி, எதிர்வரும் 2022 ஆம் ஆண்டில் கல்வி மற்றும் சுகாதார அபிவிருத்திக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான்  முதல் இடம் வழங்கியுள்ள நிலையில் கண்டி மாவட்டத்தில் பின்தங்கிய பாடசாலைகளை அபிவிருத்தி செய்தலும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விசேட வேலைத் திட்டங்களை நாம் முன்னெடுத்துள்ளோம்.

அந்த வகையில் இக்கல்லூரி விஜயத்தின்போது மாணவர்களின் கல்வி நடவடிக்கை உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி தொடர்பாக கல்லூரியின் அதிபரிடமும் ஆசிரியர்களிடமும் கலந்துரையாடியதுடன் அங்கு நவீன மயப்படுத்தப்பட்ட வினைத்திறன் விஞ்ஞான ஆய்வுக் கூடங்களை( இரசாயனவியல், பௌதிகவியல்) நிர்மாணிக்க நிதி ஒதுக்கீட்டையும் அமைச்சர் வழங்கினார்.

அதுமட்டுமல்லாது நீண்டகாலமாக நிலவிவந்த பிரச்சனையான மத்திய மாகாண விளையாட்டு அமைச்சின் கீழ் உள்ள விளையாட்டு மைதான தொகுதியை கல்லூரியின் மாணவர்கள் இலவசமாக பயன்படுத்த மத்திய மாகாண ஆளுநரிடம் உடன் கலந்துரையாடி தீர்வையும் நாம் பெற்றுக் கொடுத்தோம்.

இக் கல்லூரியை ஒரு விஞ்ஞான கல்லூரியாக மாற்றுவதே எமது நோக்கம். இப்பகுதி மாணவர்கள் மட்டுமல்லாது பன்விலை, ரங்கலை, தெல்தெனிய மற்றும் குண்டசாலை பகுதிகளிலுள்ள அனைத்து மாணவர்களும் விஞ்ஞான பிரிவில் மிளிர இது ஒரு வாய்ப்பாக அமையும். அத்தோடு மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானினால்  இங்கு வழங்கப்பட்ட கட்டிட தொகுதியையும் நாம் பார்வையிட்டோம்.
இவ் விஜயத்தின் போது அமைப்பாளர் ஆசிரியர் கௌரிசங்கர், கண்டி தமிழ் வர்த்தக சங்கத்தின் தலைவர் திரு அன்பழகன் திகன நகர வர்த்தகர்கள், இ. தொ. கா இளைஞர் அணி அமைப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Latest Articles