மண்சரிவு அபாய வலயங்களிலிருந்து வெளியேறாதவர்கள், பொலிஸ் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக பலவந்தமாக வெளியேற்றப்படுவார்கள். இதற்கான அதிகாரம் அரச அதிபருக்கு வழங்கப்படும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.
அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” சீரற்ற காலநிலையால் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் நீரில் மூழ்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மரணங்களை தடுத்திருக்கலாம். ஆனால் எச்சரிக்கையையும்மீறி வெள்ளத்தை பார்வையிட சென்றமை, நீர்நிலைகளில் நீந்தியமை உள்ளிட்ட காரணங்களாலேயே உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.
எனவே, பொறுப்புடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன். பெருந்தொற்று, சீரற்ற காலநிலையின்போது சுற்றுலா பயணங்களில் ஈடுபட வேண்டாம். அதிகாரிகளால் விடுக்கப்படும் அறிவுரைகளை உரிய வகையில் பின்பற்றுங்கள். இதனை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றும் அவர் கூறினார்.