” தேயிலை உற்பத்தியின் எதிர்காலம் தொடர்பில் எவரும் வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை.” – என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இரசாயன உரத்தின் விலை தற்போது உலக சந்தையில் அதிகரித்துள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் கேள்வி குறையும்போது விலை குறையும்.
எமது நாட்டில் இரசாயன உர பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் தேயிலை உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படவில்லை. கடந்த வருடத்தைவிடவும் இவ்வருடம் உற்பத்தி அதிகரிக்கும். சீரான காலநிலையும் இதற்கு காரணம். எனவே, இரசாயன உரத்துக்கும், உற்பத்திக்கும் முடிச்சுபோடக்கூடாது.
எனவே, தேயிலை உற்பத்தியின் எதிர்காலம் தொடர்பில் எவரும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. தேயிலை ஏற்றுமதிமூலம் நாட்டுக்கு அந்நிய செலாவணி கிடைக்கின்றது. குறிப்பாக 2010 முதல் 2020 வரை 1.5 டொலர் பில்லியன் இலாம் ஈட்டப்பட்டுள்ளது.
உலக சந்தையில் ஒரு கிலோ கென்ய தேயிலை 1.5 டொலருக்கும், இந்திய தேயிலை 2 டொலருக்கும் விற்கப்படுகின்றது. இலங்கை தேயிலை 3 டொலருக்கு விற்கப்படுகின்றது. இலங்கை தேயிலையே அதிக விலைக்கு விற்கப்படுகின்றது.
தேயிலை உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். மாதாந்தம் பறிக்கப்படும் கொழுந்தின் அளவை அதிகரிக்க வேண்டும்.”- என்றார்.