களுத்துறை, புளத்சிங்கள நகரத்தை வசிப்பிடமாகக் கொண்டவரும், இரத்தினபுரி மாவட்டம் காவத்தை நகரைப் பிறப்பிடமாகவும் கொண்ட, சாமஸ்ரீ தர்ம ஜோதி, சமாதான நீதவான் சிவா பாஸ்கரராவ் அவர்களுக்கு, இலங்கை மனித நேய சமூக நல அமைப்பினால் “ஜோதிடம்/வாஸ்து வித்யா விபூஷணம், கீர்த்தி ஸ்ரீ தேசபந்து இலங்கை புதல்வன்” என்ற கௌரவ பட்டமும் சாதனையாளர் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேற்படி பட்டமளிப்பு விழா அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், அமரபுர ஸ்ரீ சந்தர்ம நிகாயாவின் மஹாநாயகரும், இலங்கை மனித நேய சமூக நல அமைப்பின் பணிப்பாளர் நாயகமுமாகிய, சங்கைக்குரிய பெங்கமுவே நாலக தேரரின் பூரண ஆசிகளோடு, அவ்வமைப்பின் நிருவாக இயக்குநர் பேராசிரியர் ஏ.கே. நிரோஷன் மாதவ தலைமையில் நடைபெற்றது.
இலங்கை வரலாற்றில் தமிழர் ஒருவர் முதல் தடவையாக, ஜோதிடம் மற்றும் வாஸ்து போன்ற இரு துறைகளிலும் “விபூஷண பட்டம்” பெறும் முதல் சந்தர்ப்பம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமய சமூக ஆர்வலரான இவர் இரத்தினபுரி தமிழ் தேசிய கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். மேலும் கொழும்பு தேசிய கல்வியியல் கல்லூரியில் ஆங்கில உயர்நிலை டிப்ளோமா, மற்றும் தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தில் பட்டயக் கணக்காளர் மற்றும் பொருளாதாரத் துறை டிப்ளோமா பட்டதாரியும் ஆவார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஜோதிடம் மற்றும் வாஸ்து துறைகளில் தமது பல்வேறுபட்ட ஆய்வுகளையும் மேற்கொண்டு வரும் இவர் இந்திய வேத ஜோதிட சாஸ்திரங்களை இந்தியா மதுரை ஜோதிட ஆராய்ச்சி மையத்தின் தலைவர், ஜோதிட மகாகுரு பழனிசாமி தர்மராஜ் சண்முகராஜா அவர்களிடம் முறையாக் கற்றுக் கொண்டவர் என்பதுடன், காவத்தை, ஹவுப்பை, தலுகலையூர் சிவா நாச்சியப்பன், கோகிலா தேவி தம்பதியின் சிரேஷ்ட புதல்வருமாவார்.
