எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு காரணமாக சுற்றுலாத்துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான போக்குவரத்து, தங்குமிடம் மற்றும் ஹோட்டல் வசதிகள் தொடர்பில் சிக்கல் நிலவுவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்கா விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய எரிபொருள், எரிவாயு மற்றும் மின்விநியோகத்தில் சுற்றுலாத்துறைக்கு முன்னுரிமையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் தலையீட்டில், இது தொடர்பில் அமைச்சர் காமினி லொக்குகே மற்றும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண உள்ளிட்டோர் கவனம் செலுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
கடந்த முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் நாட்டிற்கு 53,255 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்கா விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
