” அரசியல் அழுத்தங்களை சமாளிப்பதற்காக நடத்தப்படும் சர்வக்கட்சி மாநாடுகளில் எவ்வித பயனும் இருக்காது. எனவே, உரிய ஆய்வுகளை மேற்கொண்ட பின்னரே இது விடயத்தில் ஜே.வி.பி. உறுதியான முடிவை எடுக்கும்.” – என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அறிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” எதிர்வரும் 23 ஆம் திகதி சர்வக்கட்சி மாநாடு இடம்பெற உள்ளதெனவும், அதில் பங்கேற்குமாறும் எமது கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நாட்டில் இதற்கு முன்னரும் சர்வக்கட்சி மாநாடுகள் இடம்பெற்றுள்ளன. தேநீர் அருந்துவதற்காகவும், ஒன்றாக இருந்து அரட்டை அடிப்பதற்காகவுமே அவை பயன்படுத்தப்பட்டுள்ளன. உரிய தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை.
எனவே, இம்முறை மாநாட்டுக்கு முன்னர் தரவுகள், தகவல்கள் வெளியிடப்பட வேண்டும். இம்மாநாட்டில் உண்மையான நல்ல நோக்கம் உள்ளதா என்பதை ஆராய்ந்துவருகின்றோம். உரிய தகவல்கள் கிடைப்பில் நாமும் பங்கேற்று, யோசனைகளை முன்வைப்போம்.” – என்றார் அநுர.










