மலையக நகரங்களில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஹட்டன் கொட்டகலை தலவாக்கலை அக்கரபத்தனை உள்ளிட்ட பல சத்தோச விற்பனை நிலையங்களில் அரசி,மா,சீனி,பருப்பு உள்ளிட்ட பல பொருட்களுக்கு தட்டுப்பாடு காணப்படுகின்றன.
இதனால் இந்த பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சதொச நிலையங்களுக்கு செல்லும் பெரும் பாலான மக்கள் ஏமாற்றத்துடன் திருப்புவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை வானளவு உயர்ந்துள்ளன. இதனால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் நியாயமான விலையில் சதொச நிலையங்களில் கிடைப்பதனால் இந்நிலையங்களை நோக்கி தூர பிரதேசங்களிலிருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வருவதாகவும், இந்நிலையங்களில் போதியளவு பொருட்கள் இல்லாததன் காரணமாக மக்கள் ஏமாற்றத்துடன் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து நிலைய முகாமையாளர்களிடம் கேட்ட போது, வழமையாக ஒரு வாரத்திற்கு அல்லது ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவு செய்து வருவதாகவும், எனினும் கடைகளில் அதிக விலைக்கு பொருட்கள் குறிப்பாக அரிசி பருப்பு, சீனி போன்ற பொருட்கள் அதிக விலைக்கு விற்பதனால் பொது மக்கள் ஒரிரு தடைவைகளுக்கு மேல் வந்து பொருட்களை கொள்வனவு செய்வதாகவும், கடந்த காலங்களில் ஒரு வாரத்தில் விற்பனையாகும் பொருட்கள் தற்போது ஒரு நாளில் விற்பனையாவதாக தெரிவித்தனர்.