வாகன உதிரிப்பாகங்களை குறிவைத்து திருடும் கும்பல் பலாங்கொட நகரில் இரவு வேளைகளில் நிறுத்தப்படும் வாகனங்களின் உதிரிப்பாகங்களை திருடும் கும்பலொன்று தொடர்பாக பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பலாங்கொடை நகரில் தனியார் பஸ் வண்டிகளில் திருடர்கள் தமது கைவரிசை காட்டுவதாக அதன் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
சில தினங்களுக்கு முன்னர் இப்பகுதியில் பெய்த கடும் மழையை அடுத்து இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இவ்வேளையில் 4 தனியார் பஸ் வண்டிகளின் உதிரிப்பாகங்கள் திருடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இப்பிரதேசத்தில் தொடர்ந்து இவ்வாறான திருட்டுச்சம்பவங்கள் இடம்பெறுவது குறித்து பொலிஸார் மேலதிக கவனம் செலுத்த வேண்டுமென பிரதேச தனியார் போக்குவரத்து பஸ் ஊழியர்கள் பொலிஸாரிடம் வேண்டு கோள்விடுத்துள்ளனர். பலாங்கொடை நகர் மற்றும் அண்மித்த பிரதேசங்களில் வாழும் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தமது அன்றாடச் செலவுகளுக்காக இவற்றை திருடி வருவதாக நகரவாசிகள் தெரிவிக்கின்றனர்.
