‘மலையக மக்களுக்காக இந்தியா சிறப்பு திட்டங்களை செயற்படுத்த வேண்டும்’

மலையகத் தமிழர்களுக்கு சிறப்பு திட்டங்களை இந்தியா செயல்படுத்த வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தமிழ் தேசிய இனப் பிரச்சினையை ஒடுக்க பணத்தை கடனாகப் பெற்றது, படைகளை மிகப்பெரிய அளவில் பெருக்கியதுதான் தற்போதைய இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம். போர் முடிந்த பிறகும், 2 லட்சம் படையினர் தமிழர் வாழும் பகுதிகளில் நிறுத்தப்பட்டனர் தமிழர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. இலங்கை தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் நிலையான அமைதி ஏற்படாது.

தமிழகத்தில் இருக்கக் கூடிய அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைப்புகள், மக்கள் உள்ளிட்ட 8 கோடி தமிழர்கள் உட்பட 130கோடி இந்திய மக்களும் இலங்கை தமிழர்களின் உரிமை பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண ஒருங்கிணைந்து ஆதரவு அளிக்க வேண்டும்.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு, மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க, சந்திரிகா பண்டாரநாயக்க, மைத்ரிபால சிறிசேனா, முன்னாள் ராணுவத் தளபதிகள் என அனைவரும் சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட வேண்டும்.

தமிழ் ஈழம் அமைப்பதற்கான பொது வாக்கெடுப்பு இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் அமைப்பின் மூலம் நடத்த வேண்டும்.

கண்காணிப்புக் குழு

இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட உதவிப் பொருட்கள் அங்கு இருக்க கூடிய தமிழர்களுக்குச் சென்று சேருகிறதா என்பதை தூதரகங்களின் மூலம் உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தில் இருந்து அனுப்பக் கூடிய உதவிப் பொருட்கள் தமிழர்களுக்குச் சென்று சேருவதை உறுதி செய்ய தமிழக அரசு குழு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதன்படி தமிழக அரசு 4 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இலங்கையில் இருக்கக் கூடிய மலையகத் தமிழ் மக்களின் வாழ்வு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டிக்கொடுத்த சிறிய வீட்டில், இடிந்து விழுமோ என்ற பயத்துடன்தான் தற்போதும் வாழ்ந்து வருகிறார்கள். எனவே,மலையகத் தமிழர்களுக்கு சிறப்பு திட்டங்களை இந்தியா செயல்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles